Wednesday, December 31, 2014

யாரோ ஒருவனின் புத்தாண்டு

சந்தோஷம், குதூகலம்
சரக்கு, சைட் டிஷ்
பீச், போன் பேச்சு
பைக் உறுமல்கள்
பார்ட்டி, பஃப்
கேக் வெட்டி கொண்டாட்டம்
...
கந்தலாடையில் மூடிய உடலும்
முகம் மறைத்த சடைமுடியும்
Beggar
By Chandrashekhar Leo Vuppuluri (Own work)
[CC BY-SA 3.0], via Wikimedia Commons
கையில் பழைய பாலித்தின்
கவரோடு,
தான் யாரென்றும் தெரியாத
தன்னை யாருக்கும் தெரியாத
'யாரோ ஒருவன்'

நெடிதுயர்ந்த பன்னாட்டு
ஐடி நிறுவனத்தின் சுவரோடு
வெறுமையாக இருந்த
சாலையை வெறித்தபடி
நிற்கிறான்..
.
.
கூட்டமா விரையும்
உறுமிய பைக்குகளில் இருந்து
ஒரு குரல்
'ஹேப்பி நியு இயர்'
.
.
முகம் மறைத்த
அந்த யாரோ ஒருவன்
தனக்குத்தானே சிரித்துக்கொள்கிறான்
..
மீண்டும் சாலை
வெறுமையானது.

Thursday, November 20, 2014

சிந்துவெளி எழுத்துமுறை திராவிட மொழிக்குடும்ப எழுத்துமுறையே - ஐராவதம் மகாதேவன் உரை.

"ஐராவதம் மகாதேவன்" தொல்லியல், அகழ்வாராய்ச்சி மற்றும் (தமிழ்) கல்வெட்டியல் துறையில் இந்தப்பெயருக்கே ஒரு தனி மரியாதை உண்டு.  ஆம், சமஸ்கிருதமே ஆதிமொழி என்று உரத்து ஒலிக்கும் பல குரல்களுக்கிடையே தமிழைத் தாங்கிப்பிடிக்கும் (உரிய ஆதாரங்களுடன்) ஒரு குரல் இவருடையது.  இதுவரை பல கல்வெட்டு ஆதாரங்களையும், ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள இவர் சமீபத்தில் (14-11-2014 அன்று) சென்னையில் உள்ள ரோசா முத்தையா நூலகத்தில் உரை நிகழ்த்தினார். 

எவ்வளவோ முயன்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னரே என்னால் சென்று சேர முடிந்தது.  இருந்தாலும் இருந்த கூட்டத்தைப் பார்த்துமே மனதிற்குள் ஒரு சந்தோஷம் பூத்துவிட்டது (நம் தமிழை எப்படியும் வாழவைத்துவிடுவார்கள் என்றுதான் வேறென்ன...).   நிகழ்வில் பல முக்கிய தமிழ் முகங்களை காணமுடிந்தது.  எனக்குப் பரிச்சயமான (என்றால் எனக்கு இவங்கள தெரியும், ஆனா அவங்களுக்கு என்ன தெரியாதுனு அர்த்தம்)  கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி, சூழியலாளர் மற்றும் திரைவிமர்சகர் தியடோர் பாஸ்கரன், இந்திய லினக்சு பயனர் குழுமம், சென்னை - இன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் பலர்.

ரிக் வேதத்தின் வழி, சிந்துவெளி எழுத்துவடிவத்திற்கான திராவிட சான்று - ஓர் ஆய்வு (A loose translation of "Dravidian Proof of the Indus Script via Rig Veda A Case Study" தமிழாக்கத்தில் தவறிருந்தால் பொறுத்துக்கொள்ளவும்) என்கிற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் நிகழ்படம் (Video) இங்கே இருக்கிறது



1. ஐராவதம் மகாதேவன் அவர்களைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றிய பக்கத்தை இங்கே படிக்கலாம்.

2. தமிழ் பிபிசியில் இந்த உரை குறித்த செய்தி

Wednesday, November 19, 2014

ராஜா ராணி - திரைப்படம் ஒரு அரைகுறை விமர்சனம்.

ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால், "படம் அழகான கவிதை போல இருக்கிறது."
There is LIFE after love failure
There is LOVE after love failure
இதுதான் படத்தின் tagline.  அதை அப்படியே பிரிதிபலிக்கும்படி படமும் வந்துள்ளது.

நம் எல்லோருக்கும் தெரிந்த, பார்த்துப் பழகிய, அரதப் பழசான அதே காதல் கதைதான் (கொஞ்சமே காலே அரைக்கால் வித்யாசமான) என்றாலும்,, வழங்கிய விதத்திலும் (திரைக்கதை) கதாப்பாத்திரத் தேர்வினாலும் படம் சிகரமாய் எழுந்து நிற்கிறது.

 படத்தை தோளில் தாங்குவதில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், சத்யராஜ் போன்றோரின் நடிப்பும், படத்தையொட்டி, கதையையொட்டியே அமைந்த சத்யன், சந்தானத்தின் காமெடியும் முக்கியப் பங்காற்றுகிறது.  கவிதை போன்ற படத்தில் G. V. பிரகாஷின் இசை மயிலிறகு போல மென்மையாய் வருடுகிறது (பின்னணி இசை டாப்).  பாடல்கள் எனக்கு பெரிதாய் மனதில் பதியவில்லை, 2,3 முறை கேட்டால் பிடித்துப்போய்விடும் ரகம்.

  ஏ.ஆர் முருகதாஸுக்கு கதையே இப்படி அமைகிறதா இல்லை அமைத்துக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை.  "எங்கேயும் எப்போதும்" போல இங்கேயும் 2 காதல், சில ப்ளாஷ்பேக், காதல் ஜோடியில் ஒருவர் விபத்தில் இறக்கிறார்.  முதல் பாதி ஒரு காதலுக்கும், மறுபாதி பிறிதொரு காதலுக்கும் என பிரித்துக்கொண்டு  அறிமுக இயக்குனர் அட்லி (எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணனைப் போலவே) இயக்கியுள்ளார். 

கதை:
முதல் காதல் முழுமையடையாத ஜான்(ஆர்யா), ரெஜினா(நயன்தாரா), இருவரும் பெற்றோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்துகொள்ளும் இருவரின் விருப்பமும் இல்லாத திருமணத்தில், ஒருவரை பற்றி ஒருவர் புரிந்து கொள்ளாத, கொள்ள விரும்பாத, தினம் வாழ்க்கை ஒடுகிறது.  திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் ரெஜினா தனது முதல் காதல் ப்ளாஷ்பேக்கை ஜானுடன் பகிர்ந்துகொள்கிறார்.

கஸ்டமர்கேர் காலில் மோதலில் ஆரம்பித்து, காதலில் முடிகிறது ரெஜினா, சூர்யா(ஜெய்) ப்ளாஷ்பேக்.  கலகலவென ஓடும் படத்தின் கலகலப்புக்கு சத்யன், ஜெய் ஜோடி க்யாரண்டி.   சத்யராஜ் நடிப்பில் அட்டகாசம் என்றாலும் அவரும், நயன்தாராவும் வரும் பல காட்சிகள் எனக்கு ஏற்புடையதாய் இல்லை(ஒரு வேளை மேல்தட்டு மக்களின் வாழ்வை நான் அறியாததாலோ என்னவோ?).  இந்த கதாபாத்திரத்தையா பத்திரிக்கைகள் ஒரு Ideal அப்பா என்றெல்லாம் கொண்டாடின?.  வேண்டாத திருமணத்திற்குப் பின்னான ப்ளாஷ்பேக் முடிந்த பின்னால் ஆர்யா புதுவாழ்விற்கு தயாரானாலும், நயன்தாரா தயாரில்லை என்பதால், வாழ்க்கைப் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகு சந்தானத்தின் மூலம் ஆர்யாவின் முதல்காதல் ப்ளாஷ்பேக்.  நயன், ஜெய் காதல் ஒரு கவிதை என்றால், ஆர்யா நஹ்ரியா நசீம் காதல் ஒரு ஹைக்கூ.

அரைகுறையின் ஃப்ளாஷ்பேக்:
நான் எப்போதும் தேவைக்கு அதிகமாகப் பொய் சொல்லமாட்டேன், இந்த இடுகையின் தலைப்பிலேயே சொல்லியிருந்தேன் இது ஒரு அரைகுறை விமர்சனம் என்று.  அதனால் விமர்சனத்தை அரைகுறையாகவே முடித்துவிட்டேன்.  படம் பாத்துட்டு வந்த அன்னிக்கு உக்காந்து விமர்சனம் எழுத ஆரம்பிச்சேன், பாதியில விட்டுட்டேன் (தூங்கிருப்பனோ? சே சே இருக்காது. வேற ஏதோ காரணமாயிருக்கும்) அப்புறம் அப்டியே விட்டாச்சு, தீடீர்னு இன்னிக்கு கையில திரும்ப கெடச்சது, சரி கழுத எழுதிபுட்டோம் நம்ம ஃப்ளாக்-ல போட்டு வுட்டுடுவோம்னு தான்.

Tuesday, November 18, 2014

கல்லூரி(காதல்) கணக்கு


By Durdana shoshe (Own work) via Wikimedia Commons
By Durdana shoshe (Own work) via Wikimedia Commons
கல்லூரி கணக்கு
நோட்டில் காதல்

கவிதை கிறுக்கியிருக்கிறிர்களா?
'ஆம்' 
.
.

அப்படியா.. வாழ்த்துகள்
கையை கொடுங்கள் இப்படி...
ஏனென்றால்,
கணக்கு தெரியாத
வாழ்கையை விட
காதல் தெரியாத

வாழ்கை வெறுமையானது...





Monday, November 17, 2014

கல்லூரித் தோழி ...

கல்லூரி காலத்தில்
கள்ளமில்லா நம் நட்பை
காதலென்று நண்பர்கள்
கிசுகிசுக்கும் போதெல்லாம்
சிரித்துவிட்டு போய்விடுவேன்
என் சிரிப்பே அவர்கள்
கிசுகிசுவுக்கு தீனியாயிருக்கும்

6 வருடங் கழிந்த
பிறிதொரு நாளில்
மாலை நேர இரயில் ஒன்றில்
நீதானா அது என்று
ஐயத்தோடு காண்கிறேன்
கண்டும் காணாததுபோல்
என் பார்வை தவிர்த்தாய்
உன் அருகிருந்தது உன்
கொடுங்கோல் கணவனாய்
இருந்திருக்கக் கூடும் என்றிருந்தேன்

என்னுடன் வந்த நம் நண்பன்
நீதானென்றான்;
உனக்கு இன்னும் திருமணம்
ஆகவில்லை என்றும் சொன்னான்
ஏனோ,
அவனும் கிசுகிசுக்கவில்லை
எனக்கும் சிரிக்க திராணியில்லை

என் பார்வை தவிர்த்த
உன் பார்வையில் ஏதோ ஒன்று
புரிந்தது...
நண்பனோடு இரயில் பெட்டியில்
வேறொரு இடம் மாறினேன்.


Wednesday, November 5, 2014

நேரம் மாறுவதில்லை..

முதலில் கானாத்தூரில் இருந்து
பேருந்தில் வருவேன்
அதன் பிறகு திருவல்லிக்கேணியில் இருந்து
மின்சார இரயில் வந்தேன்
இப்பொழுது திருவான்மியூரில் இருந்து
நடந்தோ, பேருந்திலோ வந்துகொண்டிருக்கிறேன்
ஆனால், இப்போதும்
நான் அலுவலகம் வந்து சேரும் நேரம்
கூடவோ, குறையவோ இல்லை...
நேரம் மாறுவதில்லை.

தண்டனைச் சிறை


Old man in Tiruvannamalai - India
Photo by Adam Jones
என்றோ செய்த தவறுக்கு
  இன்று தண்டனையாம் எங்களுக்கு
எங்கள் சிறைச்சாலை சற்றே மாறுபட்டது
  வேண்டியது கிடைக்கும்
நாள் விடிந்ததும் நாளேடு உண்டு
  வேளைக்கு சோறும் உண்டு
படுத்துறங்க மெத்தையுண்டு
  கண்டுமகிழ தொலைக்காட்சியும் உண்டு
ஆனாலும் அது தண்டனைச் சிறைதான்

ஆங்...
செய்த தவறுதான்
  என்ன என்கிறீர்களா?
30, 35 வருடங்களுக்கு முன்
  ஆண் இரண்டும், பெண் ஒன்றுமாக
3 பிள்ளைகள் பெற்றேன் ஐயா.

Thursday, September 25, 2014

மினி கதைகள்-1 - அன்பு-மதி

"நெடு நாட்களாகத் தேடப்பட்டு வந்த தொடர் கொலைகாரன் மதியழகனை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்"

"இந்த உலகம் அதிபுத்திசாலிங்களுக்கு மட்டும்தான் சொந்தமாமே, அறிவாளிங்க மட்டுதான் வாழனும் அதனால மத்தவங்களலாம் இவரு கொன்னுடுவாராமே... இவனை கொண்டுபோய் அந்தப் பய கூடவே போடுங்க... எக்கேடும் கெட்டு ஒழியட்டும்"  அடித்தொண்டையில் கத்தினார் இன்ஸ்பெக்டர் கரிகாலன்.

"க்றீச்" என்ற சத்தத்தோடு கதவு மூடி பூட்டப்பட்டது.

ஹூம்... அறிவையும் மதிநுட்பத்தையும் பத்தி இவங்களுக்கு எங்க புரியப்போகுது..?  அடிப்படை அறிவு கூட இல்லாதவங்கலாம் எதுக்கு உயிரோட இருக்கனும் பூமிக்கு பாரமா? அவங்கலாள யாருக்கு என்ன லாபம்?  இந்த மாதிரி அறிவில்லாம அன்பு, பாசம், கருணைனு பேசறவங்களால தான் நம்ம நாடு இன்னமும் பின் தங்கி இருக்கு... அதான் கொன்னேன் இது தப்பா? எதிரிலிருந்தவனிடம் பேசினான் மதியழகன்.

எதிரிலிருந்தவன் சினேகமாய் சிரித்தான்.

இந்த இடத்துல இருந்து தப்பிக்க எனக்கு எவ்வளோ காலம் ஆயிடப்போகுது?  அன்பாம் பாசமாம் கருணையாம்... ஆஆ.... ஹ்க்.. ஹ்க்...

மதியழகன் தொண்டைக்குழிக்கு மேலே சிறு பிளவுடன் இரத்தம் தெறித்துக்கொண்டிருந்தான்...

'உன்னமாதிரி அன்பே இல்லாதவனுக்கு இந்த உலகத்துல இடம் கிடையாதுடா...' கத்தியை துடைத்துக்கொண்டிருந்தான் எதிரிலிருந்த தொடர் கொலைகாரன் அன்பழகன்.

Wednesday, September 3, 2014

எழுத்தாளுமைகள், நீயா நானா, கல்விக்கூடங்கள் சில சிந்தனைகள்.


மோகன்
நீயா நானா நான் விரும்பிப் பார்க்கும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று(சில கருத்து முரண்களும், எண்ண வேறுபாடுகளும், தேவையற்ற வணிகநோக்கு தலைப்புகளோடு வேறுபாடுகள் இருந்தாலும் கூட).  நல்ல தகவல்களோடும் கருத்துச்செறிவோடும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி வேறந்த பிராந்திய மொழிகளிலும் (இந்தி, English-ஐ விட்டுவிடுங்கள் அங்கே அர்ணாபும், ரெபக்காவும் 'கத்தி' சண்டை போடுவார்கள், கையில் ஒரு xerox பேப்பரோடு) நடந்துவருவதாக எனக்குத்தெரியவில்லை.  நீயா நானாவின் தகவல்கள் எந்த அளவு மக்களைப் போய் சேர்ந்ததோ எனக்குத் தெரியாது ஆனால், நீயா நானாவின் மிகப்பெரிய சமூக நோக்குச் செயல்பாடு என்று நான் கருதுவது அதன் மூலம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு பரவலாகச் சென்று சேர்க்கப்பட்ட ஆளுமைகள் தான்.  தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் போன்று மிகப்பெரிய மக்கள் திரளை சென்றுசேரும் பெரு ஊடகங்கள் (mass media) தங்களின் அந்த சாதகத்தைப் பயன்படுத்தி நல்ல விஷயங்களை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தல் என்பது மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயமாகும்.  அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மற்றும் நீயாநானா குழுவினரின் பணி பாராட்டுகுரியது.

  விருத்தாசலத்தில் வசித்து வந்தாலும் விருத்தாசலத்தைச் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் இமையத்தையோ, கண்மணி குணசேகரனையோ, கடற்கரயோ, ரத்தின புகழேந்தியையோ(இவர் இன்னும் நீயாநானாவில் வந்ததாக எனக்கு தெரியவில்லை) 98% சதவித விருத்தாசல மக்களுக்கே தெரியாது.  இவர்களைப் போன்ற ஆளுமைகளை குறிப்பாக எழுத்தாளுமைகளை அந்தந்த பகுதிகளில் இருக்கும் கல்விக்கூடங்கள்தான் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.  பெரும்பாலான பள்ளிகளும், கல்லூரிகளும் ஆண்டுவிழாக்கள் மட்டும் நடத்தி அதுவும் திரையிசைப் பாடல்களுக்கு ஆட்டம் மட்டும் போட்டு தங்கள் வருடாந்திர கல்விச்சேவையை முடித்துக்கொள்கின்றன.  இதைத்தாண்டி பேச்சரங்கங்கள், விவாத வாய்ப்புகள் போன்றவற்றை கல்விக்கூடங்கள் குறைந்த பட்சம் கல்லூரிகள் மட்டுமாவது இவர்கள் தலைமையில் நடத்தவேண்டும்.   இவர்கள் போன்ற சிந்தனாவாதிகளுடன் சேர்ந்து பழகிப் பேசும் வாய்ப்புகள் மாணவர்களுக்குப் பற்பல திறப்புகளையும், சிந்தனைகளையும் ஏற்படுத்தும் கூடவே அவர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் அறிமுகங்களையும் உண்டாக்கும்.  அதனால் உண்டாகப்போகும் சமூக விளைவுகள் இன்று தெரியாது ஆனால் அவை எல்லாமே நம் சமுகத்தை, குறைந்தபட்சம் அந்தந்த வட்டார சமூகத்தையாவது சில பல அடிகள் முன்னேற்றும் என்பது உண்மை.

நீயா நானா மக்களிடம் கொண்டு சேர்த்த மிக முக்கியமான ஆளுமைகளாக நான் கருதும் சிலர்.
மோகன்
கடற்கரய்
அபிலாஷ்  (மத்திய அரசின் யுவபுரஸ்கார் விருது வாங்கியவர்)
இமையம்
கண்மணி குணசேகரன் (மனுசன் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் கூடலாம் நல்ல தொடர்புள இருக்காரு, இவரோட nativity speech ரொம்ப பிரசித்தம் youtube பாருங்க)
இளங்கோ கல்லானை
அராத்து
முத்துகிருஷ்ணன்
ஆறுமுகத் தமிழன்
செந்தில்நாதன்
ஷாலினி
போன்றோர்.   இதிலும் பெரிய பூச்சுகள் மற்றும் மெனக்கெடல்கள் இல்லாமல் பேசும் மோகன் மற்றும் அபிலாஷ் ஆகியோரின் பேச்சானது  நிறைய தகவல்களை தந்தவிட்டு நம் எண்ணத்தையே கூட சில சமயங்கள் மாற்றிவிடும்.

வணிக நோக்கு சார்ந்த அல்லது பளு குறைந்த(light weighted) மற்றும் தரவுகள் அதிகம் தேவைப்படாத தலைப்புகளில் இரண்டு பக்கத்திலும் சாமானியர்களை வைத்துக்கொண்டு, இரண்டு அல்லது மூன்று சிறப்பு விருந்தினர்களையும் பேச வைத்து நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.  ஆனால் சிற்சில நீயாநானா நிகழ்ச்சிகளில் அதன் தலைப்பின் தன்மை காரணமாக(பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற ஆழ்ந்த புரிதல் மற்றும் தரவுகளை கோறும் தலைப்புகள்) இரண்டு தரப்புகளிலும் ஒரு கீழ் வரிசையை மட்டும் Intellectuals-ஐ வைத்துக்கொண்டே ஒரு முழு நிகழ்ச்சியையும் ஓட்டி விடுகிறார்கள்.  மீதமுள்ள 3 அ 4 வரிசைகளுக்கு ஆள் மட்டும் நிரப்பி அவ்வப்போது(மொத்த நிகழ்ச்சிக்கும் சேர்த்து ஒரு 10 நிமிடம்) மைக்-ஐ அவர்களிடம் கொடுத்து அல்லது விவாதத்தின் போது அவ்வப்போது ஒரு அழகான பெண் அல்லது ஆணை காட்டுவதற்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  நல்லது நடந்தால் சரி.

Monday, September 1, 2014

எழுத்தாளர்/பத்திரிக்கையாளர் சமஸ்...

எழுத்தாளர்/பத்திரிக்கையாளர் சமஸ்*
greader பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து சில பல தமிழ் எழுத்தாளர்களை விடாமல் தேடிப்பிடித்து படித்து வருகிறேன்.  அப்படித்தான் எப்படியோ சமஸ் அவர்களின் எழுத்து எனக்கு அறிமுகமானது.  அறையில் அமர்ந்து கொண்டு கற்பனையில் கதை, கவிதை படைக்கும் எழுத்தாளர்கள் உண்டு, தன் சொந்த அனுபவங்களை சுவைபட எழுதும் எழுத்தாளர்கள் உண்டு, திரைவிமர்சனங்களும் அரசியல் பகடிகளும் சமூக பகடிகளும் எழுதும் எழுத்தாளர்களும் உண்டு, வேறு பணிகளில் இருந்துகொண்டு பொழுது போக்கிற்காகவும் hobby-யாகவும் எழுதுபவர்களும் உண்டு.  சமஸ் தனது எழுத்துகளுக்காக அந்தந்த களங்களுக்கே செல்லக்கூடியவர்(தன் ஊடகப் பணி சார்ந்து பணி நிறுவனத்தின் மூலம் என்றே நினைக்கிறேன், இவர் தற்போது தமிழ் இந்துவில் பணியாற்றிவருகிறார்).

  பிரச்சனைகளை அதன் இடங்களுக்கே சென்று அறிந்து, அங்குள்ள மக்களை பார்த்து அவர்கள் அனுபவங்களைப் பெற்று எழுதி வருகிறார்.    (இதில் எதிலும் சேராத ஒரு வகையான என்னைப்போன்ற எழுத்தாளர்களும் உண்டு.  எப்புடி...? ;) just for fun.  ஒன்னுமே எழுதாம நான்லாம் எப்புடிங்க எழுத்தாளன் ஆகமுடியும்.  அதான் அப்பப்ப இப்புடி நானா ஜீப்புல ஏறி ரவுடி ஆயிக்கிறது - நன்றி வடிவேல்).

முதலில் (தேர்தலின் போது) இந்தியாவின் வண்ணங்கள் என்று இந்தியா முழுவதும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அம்மக்களின் வாழ்க்கை, பிரச்சினை, அரசியல் நிலைப்பாடு என்பது குறித்து எழுதிவந்தார்.  தற்போது தமிழ்நாட்டு கடற்கரைகளைப் பற்றியும் மீனவ (கடலோடி என்பதுதான் சரியாம்) சமுதாயத்தைப் பற்றியும் அங்குள்ளப் பிரச்சினைகளைப் பற்றியும், அம்மக்களின் வாழ்வையும் பாடுகளையும் எழுதி வருகிறார் (நீர் நிலம் வனம்).  அவரின் எழுத்து ரத்தமும் சதையுமாக இருக்கிறது, சிற்சில கட்டுரைகள் மிகுந்த மன எழுச்சியையும், சமூக கோபத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது.  சில கட்டுரைகள் நமக்கு புதிய அறிவையும், அனுபவத்தையும் பெற்றுதருகிறது.  சில கண்ணீரை வரவழைக்கிறது, நம் அறியாமையை, இயலாமையை இடித்துரைக்கிறது.  எல்லா கட்டுரைகளிலும் மீனவர்களின் தாங்கள் மீனவர் என்பதிலும் தங்கள் வாழ்க்கை குறித்தும், தாம் வாழும் அந்த கடற்கரை குறித்தும் பெருமையும் கர்வமும் இழையோடுகிறது இதுவரை விவசாயிகளைப் பற்றி இருந்த அதே போன்ற ஒரு பெருமித எண்ணம் நமக்கு மீனவர்கள் மீதும் ஏற்படுகிறது.  கனிம மணல் பிரச்சனையிலிருந்து, கடலில் கழிவுகள் கொட்டுவது வரை பல பிரச்சனைகளையும் தன் கட்டுரைகளில் காட்டிச் செல்கிறார்.  தென் மாவட்டங்களில் புற்றுநோய் ஏதோ சாதாரண விஷயம் போல் ஆகிவிட்டிருக்கிறது எலும்பு புற்று, நுரையில் புற்று, இரத்தப்புற்று என்று வகை வகையாக தாக்கப்படுகிறார்கள் என்கிறார்.  படிக்கும்போதே கண்ணீர் வழிய ஆரம்பித்துவிடுகிறது.  நாம் எவ்வளவு விஷயங்கள் தெரியாமல் இருக்கிறோம்... நம் மக்களின் பிரச்சனை தெரியாமலே நாம் ஈரான், இஸ்ரேல்-பாலஸ்தீனம், ISIS என்று முகநூலிலும் டிவிட்டரிலும் பொங்கி வெடிக்கிறோம் (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்).  நம் ஊர் செய்தி ஊடங்களே இதுபோன்ற விஷயங்களை கையில் எடுக்காதபோது வடநாட்டு இந்தி ஆங்கில ஊடங்கள் எங்கிருந்து இதையெல்லாம் பேசப்போகிறது?  இந்தக் கட்டுரையில் படிக்கும் அவலங்கள் ஏதேனும் டில்லியிலோ, மும்பையிலோ நடந்திருந்தால் இந்நேரம் எல்லா செய்தி ஊடங்களும் இதைப் பேசியிருக்கும் (டிஆர்பி ஏற்றதான்), நாமும் ஹேஷ் டேக்களுடன் சமூக வலைதளங்களில் சீறியிருப்போம், முகநூல் cover photo-வை கருப்புக்கு மாற்றியிருப்போம், மெழுகு வர்த்திகளை ஏற்றிய போட்டோக்களைப் பகிர்ந்திருப்போம், அரிதிலும் அரிதாக சென்னையில் மெரினாவில் ஒரு மாலை கூடியிருப்போம் பின்னர் '''மறந்திருப்போம்'''.  விடுங்கள் எதற்கோ இந்தப் பதிவை ஆரம்பித்து எங்கோ வந்துவிட்டேன். 

முடிந்தால் சமஸின் கட்டுரைகளை நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.  அவரின் வலைப்பூ சுட்டி http://writersamas.blogspot.in/


*-> புகைப்படம் அவருடைய வலைப்பூவிலிருந்து இணைக்கப்பட்டது.



Sunday, August 31, 2014

இணையத்தில் வாசித்தல் மற்றும் வாசிக்க சில எழுத்தாளுமைகளின் சுட்டிகள்

   வாசிப்பு என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும் அது ஒருவர் படிக்கும் புத்தகங்களின் வகையில் (Genre) ஆரம்பித்து, அவர் படிப்பதற்கு பயன்படுத்தும் ஊடகம் (medium), படிக்கும் வேகம், மொழி, இடம், காலம் என பலவகையிலும் வேறுபடும்.  தற்காலத்தில் ஒருவர் படிக்க பயன்படுத்தும் ஊடகத்தை 1. காகித அடிப்படிடையில் (hard copy) 2. மென்பொருள் அடிப்படையில் (soft copy) என்று இரண்டு பெரும் பிரிவாகப் வகைப்படுத்தலாம்(3.  இணைய இணைப்பின் உதவியுடன் உலாவியில் படிப்பதும் உள்ளது அது கிட்டத்தட்ட 2வது வகைதான்).  இதிலும் மென்பொருள் அடிப்படையிலான புத்தகம் என்பது கணினியில் படிப்பது தொடங்கி அலைபேசி, பலகைக்கணினி போன்றவற்றையும் தாண்டி புத்தகத்திற்கெனவே பயன்படுத்தும் வகையில் கிண்டில் வரை வேறுபடுகிறது.  இதிலும் புத்தகத்தின் மென்பொருள் கோப்பு வடிவத்தின்(format) அடிப்படையில் epub, pdf, html என்று பலவாறு இருக்கிறது.  இன்றுவரையில் காகிதப் புத்தகங்களையே கொண்டாடும் பலரும் (நானும்) கொஞ்சம் கொஞ்சமாக மென்புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  கல்லில் வடித்து, செப்புப் பட்டயங்களில் ஏற்றி, ஓலைச்சுவடிகளில் எழுதி அதைப் படியெடுத்து, காகிதத்தில் அச்சடித்து அதை நகலெடுத்து எப்படி எப்படியோ உருமாறிய எழுத்தும், புத்தகங்களும், வாசிப்பும் இந்த 21-ம் நூற்றாண்டில் மிகச் சில வருடங்களுக்கு முன் எடுத்துள்ள அவதாரம் தான் மென் புத்தகம்.  சரி இப்பொது இணைய வாசிப்பைப் பற்றியும், என்ன/யாரை/எந்த சுட்டியில் வாசிக்கலாம் என்று பார்க்கலாம்.

இணையத்தில் படித்தல்:
சில வருடங்களுக்கு முன்புவரை கூட இணைய இணைப்பும் அதன் பயன்பாடும் ஒரு சிலரால் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாக இருந்துவந்தது.  அதற்கான காரணங்கள் இணைய பயன்பாட்டிற்கு செலுத்த வேண்டிய விலை, பயன்பாட்டிற்கு வேண்டிய உபகரணங்களின் விலை மற்றும் அதன் கிடைத்தல், பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவு இன்னும் சில.  இணையம் அலைபேசியின் மூலம் பயன்படுத்தக்கூடிய நிலை வந்ததும், அலைபேசிகளின் சந்தை மற்றும் அலைபேசி இணைப்பு வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களின் போட்டி ஆகியவற்றால் இவற்றின் விலை மட மடவென சரிந்து எல்லோரும் பயன்படுத்தும் நிலை வந்தது.  இது பல சாதக பாதங்களை உள்ளடக்கியிருந்தாலும் வாசிப்பை ஒரு பழக்கமாகக் கொண்டவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை திறந்துவிட்டது அதுதான் இணையத்தில் வாசித்தல்.  இணைய வாசித்தல் பெருக ஆரம்பித்ததும் பல எழுத்தாளர்களும், எழுத்துதொடர்பான நிறுவனங்களும் தங்களுக்கென இணையதளத்தை உருவாக்க ஆரம்பித்தன (Survival of the fittest & Adopt the technology as soon as possible).  வாசிப்பவர்களும் பல விதமான மென்பொருட்களைப் பயன்படுத்தி அவர்கள் இணையதளத்தை அனுக ஆரம்பித்தனர்.  இதனால் எல்லா வாசகர்களையும் சென்றுசேரவும், திருப்திபடுத்தவும் இந்த இணையதளங்கள் பல வித வடிவங்களை எடுக்க ஆரம்பித்தன உதாரணத்திற்கு ஒரே இணையதளம் மேசைக்கணினி, அலைபேசி, பலகைக்கணினி என்று பல வித கருவிகளுக்கே ஏற்ப தன்னுடைய இணைய இடைமுகங்களை (Interface) உருவாக்கின.  அதன்பிறகு படிப்பானைப் ([feed] reader) பயன்படுத்தும் பயனர்களுக்காக RSS, Atom வகையறாக்களிலும் தங்கள் இணைய பக்கங்களை தர ஆரம்பித்தன.  அதற்கு அடுத்து தங்கள் வாசகர்களுடன் எப்போது தொடர்பிலிருக்க வேண்டியும், தம் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியும் (வணிக நோக்கும் உண்டு), வாசகர்கள் எந்நேரமும் வாசம் செய்யும் சமூக இணையதளங்களான facebook, twitter போன்ற இடங்களிலும் தங்கள் கணக்குகளை ஆரம்பித்தன.  இன்று ஒருவர் தன் வலைப்பூவில் ஒரு பதிவிட்டால் அது rss மற்றும் atom feed-ஆக மாறுகிறது, முகநூல் நிலைதகவலாக (status message) மாறுகிறது, twitter-ல் கீச்சாக மாறுகிறது இப்படி பல வடிவத்தில் வாசகனை சென்றடைகிறது.

என்ன/யாரை/எந்த சுட்டியில் வாசிக்கலாம்:

விருது வென்ற, நன்கு பரிச்சயமான எழுத்தாளர்கள் தொடங்கி, விருதை நோக்கி சென்றுகொண்டிருக்கும், விருது பற்றி கவலைப்படாத, மனதிருப்திக்காக, வணிக நோக்கில் என பல காரணங்களுக்க எழுதும் பலரும் தங்களுக்கென ஒரு இணையதள பக்கமோ, ஒரு வலைபூவோ குறைந்த பட்சம் ஒரு முகநூல் பயனர்கணக்கிலோ தொடர்ந்து எழுதி இணையத்தில் இட்டு வருகிறார்கள்.  அப்படி எழுதும் ஒரு சிலரின் இணையபக்கம், வலைப்பூ, முகநூல் பக்கங்களை உங்களுக்காக கீழே பட்டியலிடுகிறேன். 

குறிப்பு: இது ஒரு சிறு பட்டியல் மட்டுமே முழுமையான பட்டியல் அல்ல(தர வரிசைப் பட்டியலும் அல்ல) எனவே, உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பிடாமல் விட்டிருந்தால் கோபப்படவேண்டாம்.  பின்னூட்டதில் அவர்களை பற்றி நீங்களே அறிமுகப்படுத்திவிடுங்கள்.  நான் புதிதாக அறியும் எழுத்தாளர் விவரங்களை நானும் அவ்வப்போது இதே பதிவில் சேர்த்து விடுகிறேன்.


1எழுத்தாளர்website
2ஜெயமோகன் www.jeyamohan.in
3சாரு நிவேதிதாwww.charuonline.com/
4எஸ். ராமகிருஷ்ணன்www.sramakrishnan.com/
5பத்ரி சேஷாத்ரிwww.badriseshadri.in/
6வா. மணிகண்டன்www.nisaptham.com
7சமஸ்www.writersamas.blogspot.in/
8அருண் நரசிம்மன்www.ommachi.net/
9வெ. ராமசாமிothisaivu.wordpress.com/
10விமலாதித்த மாமல்லன்www.maamallan.com/
11
12சுகா (சுரேஷ் கண்ணன்)http://venuvanam.com/
13
14கடற்கரய்http://thesanthri.blogspot.com/
15சி. சரவணகார்த்திகேயன்www.writercsk.com/
16என். சொக்கன்http://nchokkan.wordpress.com/
17பா. ராகவன்www.writerpara.com/
18மரபின் மைந்தன் முத்தையாhttp://marabinmaindanmuthiah.blogspot.in/
19பெருமாள் முருகன்http://www.perumalmurugan.com/
20அ. முத்துலிங்கம்amuttu.net/
21ருத்ரன்rudhrantamil.blogspot.com/
22தேவதேவன்http://poetdevadevan.blogspot.in/
23நெல்லைக் கண்ணன்thamizhkadal.blogspot.com/
24அறிவுமதிhttp://arivumathi.wordpress.com/
25வண்ணநிலவன்http://wannanilavan.wordpress.com/
26வண்ணதாசன்http://vannathasan.wordpress.com/
27அழகிய சிங்கர்http://www.navinavirutcham.in & http://azhagiyasingar.blogspot.in/
28பாலகுமாரன்http://balakumaranpesukirar.blogspot.in/
29என். இராமதுரைhttp://www.ariviyal.in/
30நாஞ்சில் நாடன்http://nanjilnadan.com/
31மாலன்http://maalan.co.in/
32கண்மனி குணசேகரன்http://kanmanigunasekaran.blogspot.in/

Saturday, July 12, 2014

பட்ஜெட் - 2014


   மோடி தலைமையிலான பாஜக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நேற்று இனிதே நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  இரண்டு நாட்களுக்கு முன்னதாக தான் இரயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் திரு. சதானந்த கவுடாவால்  தாக்கல் செய்யப்பட்டது, மிகப்பெரிய எதிர்ப்புகள் ஏதும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட (எங்கே எதிர்ப்பது? ஆளும் கட்சிக்கு மட்டுமே பெரும்பான்மை பலம் இல்லாமல் இருந்த ஒரு நாட்டில், முதல் முறையாக எதிர்கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாமல் போனது துரதிருஷ்டம்தான், தங்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்தை தர வேண்டும் என்று முறையிடும் அளவிற்கு ஆகிவிட்டதே.. பாவம்!) இது மிக சிறிய அளவிலான சலசலப்பை மட்டுமே ஏற்படுத்தியது(கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே தூரலோ, சிறு மழையோ...).  முந்தைய ஆட்சியில் பல புதிய இரயில்கள் தமிழகத்திற்கு கிடைத்தபோதும் சிறு சிறு சஞ்சலப்பு இருந்த தமிழகத்தில், இந்தமுறை மொத்தமாக வெறும் 4 இரயில்கள் மட்டுமே கிடைத்திருந்தாலும்(அதிலும் ஓன்றைத்தவிர மற்ற இரயில்கள் அனைத்தும் சென்னையிலிருந்து அப்படியே... அப்படியே வடக்கு நோக்கி சென்றுவிடுகிறது.. Actual-ஆ இந்த டிரெயின்லாம் வடநாட்டுக்காரன் மெட்ராசுக்கு சுலுவா வந்து போகதான்.  மின்சாரம், மருத்துவம், கல்வி போன்றே சென்னையில் இருப்பவர்கள் மட்டுமே மக்கள், மற்றோரெல்லாம் மாக்கள்)திமுக, அதிமுக இரண்டுமே நல்ல கருத்துகளையே உதிர்த்துள்ளது.  போதும் பாஸு, பொது பட்ஜெட்னு சொல்லிட்டு இரயில்கதைய சொல்லிட்டு இருக்கீங்க.... ம்.. வண்டிய நகத்துங்க...

   திரு அருண்ஜேட்லி அவர்கள் தயாரித்த இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் என்று எதும் இல்லை என்றாலும் மிகப் பாதகமான அம்சங்களும் எதுவும் இல்லை என்பதால், மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் மிகப்பெரிய எதிர்ப்பும் இல்லை (அம்மாடி, எவ்ளோ மிகப்பெரிய).  பட்ஜெட்டுக்குப் பின்னால் அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள், கொள்கைகள் எப்படி அமையுமோ? நாட்டின் முன்னேற்றத்திற்காக கசப்பு மருந்தைக் கொடுத்துவிடுவார்களோ என்று அஞ்சி சில மாதங்களாக வானம் தொட்டு வளர்ந்துகொண்டிருந்த பங்குச்சந்தைக்கூட ஒரே நாளில் 500த்தி சொச்சம் புள்ளிகள் இறங்கி தரையைத் தடவிக் கொண்டிருந்த்து.  ஊடகங்கள், ஒரே நாளில் இந்திய முதலீட்டார்களின் சொத்து சில ஆயிரம்/லட்சம் கோடிகள் காணாமல் போய்விட்டது என்று பிளிரிக்கொண்டிருந்தன.  ஆனால், நிதிநிலை அறிக்கை நாளான நேற்று(10-7-14) பங்குச்சந்தை அருண்ஜேட்லி அவர்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு மெல்ல மேலெழுந்து வந்தது, திறந்த வீட்டிற்குள் வர எட்டிப்பார்க்கும் குட்டிப்பூனை போல.

   Salaried community எனப்படும் சம்பளக்காரர்களுக்கு ரசகுலா இல்லாவிட்டாலும் ரஸ்தாலி வாழைப்பழம் கொடுத்துள்ளார்.  ஆமாம், ஒட்டு மொத்தமாக இதுவரை இருக்கும் வரிச்சலுகைக்கு மேல் இன்னும் ஒரு லட்ச ரூபாய் வரிச்சலுகைக்குள் வந்திருக்கிறது.  வருமான வரிக்கான பிரிவுகளில்(Slab)-ல் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றாலும் 5 லட்சம் வருமானம் இருப்பவர் 10,000 ருபாயும், 5-க்கு மேல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர் 20,000 ருபாயும், அதற்குமேல் உள்ளவர்கள் 30,000 ரூபாயும் வரி செலுத்துதலில் இருந்து மிச்சம் பிடிக்கலாம்.

                                                                       நடப்பிலிருப்பது        நடைமுறைக்கு வரவிருப்பது
வரி செலுத்துதலில் இருந்து விலக்கு :              2 லட்சம் வரை                    2.5 லட்சம் வரை
                                                                  (முதியோர் ; 2.5 லட்சம்)         (முதியோர் 3 லட்சம்)

80C பிரிவின் கீழான விலக்கு :                        1 லட்சம்                              1.5 லட்சம்
வீட்டுக்கடன் மீதான வரி விலக்கு ;                 1.5 லட்சம்                           2 லட்சம்

நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, என் கவனத்தை ஈர்த்த(ஆமா, பெரிய இவரு...  உண்மைய சொல்லு மத்த விஷயலாம் ஒனக்கு தெரியாது தானே..) சில புதிய (அ) பழைய திட்டங்கள்/துறைவாரியான நிதி ஒதுக்கீடுகள்/ புதிய அறிவிப்புகளை கீழே தந்துள்ளேன்.

* வளர்ச்சி 5.4 -லிருந்து 5.9 ஆக இருக்கும், நிதிப் பற்றாக்குறை 4.1 ஆக இருக்கும் இரு ஆண்டுகளில் 3 ஆக குறைக்கப்படும்.
* புதியதாக 5 IIT களும், 5 IIM களும் மேலும் 4 AIIMS மருத்துவமனைகளும் திறக்கப்பட உள்ளது
* அந்தமான் & நிக்கோபார் பகுதியில் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
*  பார்வைச் சவால் உடையோருக்கான புத்தகங்கள் அச்சிடும் பிரையல்(Brail) அச்சகங்கள் 15 புதியதாக மற்றும் இயங்கிவரும் 10 அச்சகங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
* 200 கோடி ருபாய் செலவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைத்தல். (குஜராத்காரர் அப்டின்றதனாலேயே காங்கிரஸ் இவருக்கு தர வேண்டிய மரியாதய கொடுக்கல, நான் ஆட்சிக்கு வந்தும் இவருக்கு பெரிய செல வப்பேனு மோடி எலக்சனப்ப சொன்னாருள்ள...)
* 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் தனியாருடன் கூட்டு வைத்து(PPP - Private Public Partnership) விமான நிலையங்கள் அமைத்தல்.  (கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி கஸ்டமர் கம்மினு பாண்டிச்சேரிக்கு சர்வீஸ் இருந்த கடைசி ஏர்லைன்ஸ் நிறுவனமும் கடைய சாத்துனது ஞாபகம் இருக்கா?  டிரெயின் விலை ஏறுனதுனால இனி கொஞ்சம்பேரு ஃபிளைட் யூஸ் பண்ணா நல்ல சக்ஸஸ் ஆக சான்ஸ் இருக்குற ஒரு திட்டம்)
* காப்பீட்டுதுறை மற்றும் பாதுகாப்புத்துறையில் 26% லிருந்து 49% வரை அன்னிய நேரடி முதலீடு அனுமதிப்பு.  (அப்பாடா, 51%ஆக்கபோறாங்க அவ்ளோதான் நாம, வெளிநாட்டுக்காரன் கையில நம்மள அடகு வச்சிடுவாங்கனு பயமூர்த்திகிட்டே இருந்தாங்க நல்ல வேள..)
* புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்(New and Renewable Energy) துறையில் முதலீடு 500 கோடி.  (தமிழ்நாடு இந்த லிஸ்ட்ல முக்கியமா சேர்க்கப்பட்டிருக்கு... நாம மின் மிகை மாநிலமா ஆயிடுவோமா... இல்ல சில பல வருஷங்களுக்குப் பிறகு 'அதுவே, பழகிடுமா' பாப்போம்.)
* ஆதி திராவிட நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு 50548 கோடி ஒதுக்கீடு.
* நீர்வழிப் போக்கு வரத்து (Jal Mark Vikas) மேம்பாட்டுக்கு 4200 கோடி.  (சென்னையில கூவத்துலயும் கால்வாய்லயும் மதராசப்பட்டினம் மாதிரி போட் போகும்னுலாம் எதிர்பாக்காதீங்க... )
* விவசா(யம்)யிகளுக்கான தொலைக்காட்சி சேவை 100 கோடி.
* புதிய விவசாயப் பல்கலைக்கழகங்கள் அமைக்க 200 கோடி.
* 4 AIIMS மருத்துவமனைகள் உருவாக்க 500 கோடி.
* மெட்ரோ இரயில் திட்டத்திற்கு 100 கோடி.
* கிராமப்புறங்களுக்கு இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க 500 கோடி.
* பாதுகாப்புத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு ஒரு-தகுதி-ஒரு-ஓய்வூதியம் (One rank - one pension) 1000 கோடி.  (இப்ப புரியுதுங்களா ஏன் கவர்மென்ட்டு பென்சன்லாம் இனிமே புச்சா வேலைக்கு(பாதுகாப்புத் துறை தவிர்த்து, இப்பொழுதும் இவர்களுக்கு மட்டும் ஓய்வூதியத்திலிருந்து, மானியம் வரை எல்லா சலுகையும் உண்டு) சேர்ரவங்களுக்கு கெடையாதுனு ஏன் சொல்லிச்சுனு? 1000 கோடி ரூவா... )
* பொதுச் சேம நல நிதியில் முதலீடு செய்யும் தொகைக்கான உச்சவரம்பு 1 லிருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Sunday, June 8, 2014

தகவல் தொழில் நுட்ப உலகம் கடந்த வாரம் (01-06-14 முதல் 07-06-14 வரை)

ஐபிஎம் நிறுவனம் இணைய உலாவி மூலம் நடைபெறும் தவறுகளைத் தடுக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளது.

கூகுளின் பிளேஸ்டோர் பேபால் ஆதரவு மற்றும் எளிமையாக்கப்பட்ட செயலி அனுமதிகளுடன் நடைமுறைக்கு வந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் 7 இன்ச் திரையுடன் கூடிய சாம்சங் கேலக்ஸி டபுள்யு(Galaxy W) என்கிற அதன் (பெரிய) நுண்ணறிபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.

மொத்தமுள்ள டிவிட்டர் பயனர்களில் 44% பேர் ஒரு முறைகூட எந்த டிவிட்டும் செய்ததில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

அலைபேசி விளையாட்டான டெம்பிள்ரன் இதுவரை 100கோடி முறை தரவிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைபேசி புகைப்பட திருத்தி செயலியான இன்ஸ்டாகிராம் மேலும் பல புதிய கருவிகளை அதன் செயலியில் சேர்த்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஸ்விஃப்ட்(swift) என்கிற பெயரில் புதிய கணினி மொழியை உருவாக்கியுள்ளது.

ஐஐடி-கான்பூர் தனது இரண்டாவது மீகணினி(Super Computer)யை அறிமுகப்படுத்தியுள்ளது.

விண்டோஸ் அலைபேசிகளுக்கான வாட்ஸ்ஆப் செயலி புதிய பிழை திருத்தங்கள் மற்றும் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகச் செய்திகள் பதிவு

தகவல் தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் (25-5-14 முதல் 31-5-14)


வருங்காலத்தில் நுண்ணறிபேசிகளில் தரவிறக்கிப் பயன்படுத்தப்படும் வங்கி சம்பந்தப்பட்ட செயலிகள் கொந்தர்களால்(hacker) அதிகம் பாதிக்கப்படும் ஒன்றாக இருக்கும் துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.

நுண்ணறிபேசி புகைப்படச் செயலியான இன்ஸ்டாகிராம் ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் சேல்ஸ்ஃபோர்ஸ்1 என்கிற பெயரில் ஒரு புதிய நுண்ணறிபேசி செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகுள் நிறுவனமானது ஸ்கைபாக்ஸ் இமேஜிங் என்கிற செயற்கைகோள் உருவாக்கம் மற்றும் தரவுமைய நிறுவுதல் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக அறியப்படுகிறது.

பிலிப்ஸ் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது நுண்ணறி அலைபேசிகளை அறிமுகப்படுத்தி இந்தியச் சந்தையில் நுழையவுள்ளது.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் $210 மில்லியனை 4 முதலீட்டார்களிடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் மின்-வணிகம் (E-Commerce) வரும் வருடத்தில் சுமார் 50,000 பணிகளை உருவாக்கும் என கருதப்படுகிறது.

இன்போசிஸ் நிறுவனம் அதன் அடுத்த முதன்மைச் செயலதிகாரிப் பதவிக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்கவுள்ளது.  முக்கியமான விஷயம் என்னவென்றால் முதன்முறையாக இன்போசிஸ் நிறுவனர்கள் 7 பேர் அல்லாத ஒருவரை அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

ஸ்னாப்டீல் நிறுவனம் தனது தரவுதளத்தை மாங்கோடிபி-க்கு மாற்றவுள்ளது.  இதன்முலம் தனது பயனர்களுக்கு வேகமான, மிகச் சிறப்பான பயன்பாட்டு அனுபவத்தைக் கொடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.

சீன அரசு, தனது அரசு அலுவலகப் பயன்பாட்டிற்காக வாங்கும் கணினிகளில் இனி விண்டோஸை நிறுவப்போவதில்லை என அறிவித்துள்ளது.

இதுவரை கருத்தளவில் இருந்து வந்த கூகுள் (நுண்ணறி) தானியங்கு மகிழ்வுந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.  கூடுதல் தகவல் இந்த மகிழ்வுந்தில் திருப்புவதற்கான சுக்கானோ(steering), வேகம் முடுக்கியோ(accelerator) கிடையாது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது மேகக் கணிமை தொழில்நுட்பத்தினை பரவலாக்குவதற்காக சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகச் செய்திகள் பதிவு

Sunday, May 25, 2014

தகவல் தொழில்நுட்ப உலகம் கடந்தவாரம் (18-5-14 முதல் 24-5-14 வரை)


மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ-ஈ  (Moto-E) என்ற பெயரில் ஒரு புதிய பட்ஜெட் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கூகுள் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளதாக ஒரு கருத்துகணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

வரும் 2015-ம் ஆண்டில் லெனோவா நிறுவனமும் அணிகணினி தொழில்நுட்பத்தில் நுழையவுள்ளதாக தெரிகிறது.

இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் ஃபிளிப்கார்ட் நிறுவனம், மியன்தாரா(myntra) என்கிற மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது.

ஈ-பே (ebay) நிறுவனத்தின் தரவுதளம் கொந்தர்களால் சமரசம் (compromised) செயப்பட்டதால் இந்நிறுவனம் தனது பயனர்களை தங்கள் கடவுச்சொற்களை மாற்றுமாறு கூறியுள்ளது.

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்பி(hp) ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்களை தெரிவிக்கின்றன.

கூகுள் நிறுவனம் முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கவல்ல பலகை/சிலேட்டு/குளிகை (Tablet) கணினிகளை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகம் பதிவு

Monday, May 19, 2014

16-வது நாடாளுமன்றத் தேர்தல்

நடந்து முடிந்த 16-வது நாடாளுமன்றத் தேர்தல் பலருக்கும் பலவிதமான எண்ணங்களை உருவாக்கியிருக்கலாம், நானும் விதிவிலக்கல்லவே.. என் மனதில் சிதறலாகத் தோன்றிய எண்ணங்களை சற்றே சரி செய்து இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன், நிச்சயாமக ஒரு கோர்வையாக இருக்காது.  எண்ணங்கள் பெரும்பாலும் கோர்வையாக இருக்காது அல்லவா? அதனால அட்ஜஸ்ட் பண்ணி படிச்சிக்கோங்க... (ஆமா, எத்தன பேரு இந்த பிளாக்க படிக்கறாங்கனுலாம் கேக்கக்கூடாது சரியா...)

இந்தியாவில் மொத்தம் 543 பாராளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.  இதில் ஒரு கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கவேண்டுமானால் அதற்கு (மொத்த தொகுதிகள்)/2 + 1 இடங்களைப் பெறவேண்டும்.  1984-ல் இராஜீவ் காந்தியின் ஆட்சிக்குப்பிறகு இந்தியாவில் இன்றுவரை தனிப்பெரும்பான்மையுடன் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கவில்லை.  (1984-ல் இந்திராகாந்தியின் படுகொலையின் அனுதாப அலையும், இராஜீவ் காந்திக்கு இயல்பாகவே அமைந்திருந்த மக்கள் வசீகர தன்மையும் இணைந்து 414 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.)  இந்த முறை 30 வருடங்களுக்குப் பிறகு அதுபோன்றதொரு தனிப்பெரும்பான்மையுடன் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி (பாஜக) மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது.  இதற்கு எந்த அனுதாப அலையும் காரணம் இல்லையென்றாலும், மக்களுக்கு காங்கிரஸின் மீதிருந்த கோபமும், நரேந்திர மோடியின் மக்கள் வசீகரத் தன்மையும் இணைந்து அதை நிறைவேற்றியுள்ளது.  பாஜக சார்பில் அத்வானி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தால் இதுபோன்றதொரு வெற்றி சாத்தியமா என்பது கூட கேள்விக்குறிதான். 

  நரேந்திர மோடியையும் சாதாரணமாக சொல்வதற்கில்லை, இந்த வெற்றிக்காக உண்மையில் மிகவும் பாடுபட்டிருக்கிறார்.  (மோடி எப்படிப்பட்ட மனிதர், மதவாதியா, என்பற்குள் எல்லாம் நான் வரவில்லை.)  இதுவரை நீங்களும், நானும் அறிந்தவரையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று அதிகமாகப் பிரச்சாரம் செய்தவர் மோடியே என்று செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் சான்று தருகின்றன.  தமிழ்நாட்டில் பெரிய வாக்கு வங்கி இல்லாத நிலையிலும் கூட பல முறை பிரச்சாரத்திற்காக மோடி வந்துள்ளார் என்றால் பாஜக-வின் வாக்குவங்கிகளாக, கோட்டைகளாக இருக்கும் மற்ற மாநிலங்களில் எத்தனைமுறை சென்றிருப்பார் என்று நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்.

சரி நாடுமுழுவதுமான தேர்தல் நிலவரத்திற்கு வருவோம்:
இந்தியாவின் பிரதமரை முடிவுசெய்யும் மாநிலங்கள் என்று 6 மாநிலங்களை சொல்லலாம் [அடைப்புக்குள் (மாநிலத்தின் மொத்த நாடாளுமன்றதொகுதிகள் - பாஜக வெற்றிபெற்ற தொகுதிகள்)] அவை உத்திரப்பிரதேசம்(80-71), மாகாராஷ்டிரா(48-23), ஆந்திரப்பிரதேசம்(42-4), மேற்குவங்காளம்(42-2), பீகார்(40-22), தமிழ்நாடு(39-1) மொத்தம்(291-123).  ஆம், நீங்கள் கிட்டத்தட்ட இந்த 6 மாநிலங்களிலிருந்து மட்டுமே பாஜக அதன் மொத்த இடங்களில் கிட்டத்தட்ட 40% இடங்களைப் பெற்றுள்ளது. 

பாஜக கோவா(2), இமாச்சலப் பிரதேசம்(4), இராஜஸ்தான்(25), குஜராத்(26), உத்ராகண்ட்(5), சண்டிகர்(1), தாத்ரா ஹவேலி(1), டாமன் டையூ(1), டெல்லி(7), அந்தமான் நிக்கோபார்(1)  ஆகிய மாநிலங்களில் மொத்த இடங்களையும் கைப்பற்றியுள்ளது.  கேரளாவில் மட்டும் இன்றுவரை(ஆம், இன்றுவரை கேரளாவிலுள்ள எந்த நாடளுமன்றத் தொகுதியிலும், எப்போது நடந்த தேர்தலிலும்.  இந்தமுறை தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளருக்கும் சசிதரூருக்கும் ஆரம்பத்தில் இருந்து இழுபறி இருந்தாலும் கடைசியில் சசிதரூர் வென்றுவிட்டார்) பாஜக தனது கணக்கைத் தொடங்கவில்லை.

டெல்லிக்கு நடந்த மாநிலத்தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு நல்ல எண்ணிக்கையில் இடங்களைப்பெற்ற பாஜக அதை அப்படியே முன்னேற்றி டெல்லியின் மொத்த 7 இடங்களையும் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.  மொத்தம் 4 இடங்களைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி 4-ம் பஞ்சாபிலிருந்தே பெற்றுள்ளது, ஆச்சர்யப்படும் வகையில் டெல்லியில் மாநில ஆட்சியைப் பிடிக்கும் வரை சென்ற ஆம் ஆத்மி அங்கு ஒரு இடத்தைக்கூட பிடிக்கவில்லை.

நம்பினால் நம்புங்கள் இந்தியாவிலேயே தற்போது 3-வது பெரிய கட்சி(எம்பி-களின் எண்ணிக்கை அடிப்படையில்) அதிமுகதான்.  ஆம்,
பாஜக - 283 (கூட்டணி கட்சிகளின் இடங்களில்லாமல்)
காங் - 44 (கூட்டணி கட்சிகளின் இடங்களில்லாமல்)
அதிமுக - 37
திரிணமுல் காங். - 34

இத்தனைக்கும் அதிமுக தேசிய கட்சி இல்லை ஒரு மாநிலக் கட்சிதான்.  (இந்தியாவின் தேசிய கட்சிகளாக அங்கீகாரம் பெற்றவை காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை மட்டுமே).  தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் இந்தமுறை ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.  ஒன்று மட்டும் தெளிவு என்னதான் நாடு முழுவதும் மோடி அலையடித்தாலும்  தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களை அது ஒரு சிறிதும் பாதிக்கவில்லை.  பாஜக தென் மாநிலங்களில் தனது இருப்பை இன்னும் நிலைபடுத்திக்கொள்ள வேண்டும்.

தேசிய அளவில் முக்கியத் தலைவர்களான ஜஸ்வந்த்சிங், கபில்சிபல், அருண் ஜேட்லி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோரின் தோல்வி பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

தமிழ்நாடு:
பெரும்பாலான கருத்துக் கணிப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அதிமுக மொத்தமுள்ள 39 இடங்களில் 37 கைப்பற்றி விஸ்வரூப வெற்றி பெற்றுள்ளது, அதுவும் கூட்டணி ஏதும் இன்றி தனியாகவே.  பெரும்பாலான தொகுதிகளில் திமுகதான் இரண்டாவது இடம் அதுவும் முதல் இடத்தைப்போல 3/4 பங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது.  இருந்தாலும் எந்தவொரு தொகுதியிலுமே வெற்றி பெறாமல் பூச்சியமாகிப்போனது துரதிஷ்டம் தான்.  தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி ஒரு சிறு சலனத்தையாவது ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தேன் கூடங்குளம் உதயகுமார் கூட ஒன்றும் செய்யமுடியவில்லையே வருத்தமாகத்தான் இருக்கிறது. பதிவான மொத்த வாக்குகளில் 1-4% வாக்குகளையாவது பெறுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் 0.5% உடன் திருப்தி அடைந்துவிட்டது.  பராவாயில்லை கட்சியின் முதல் நாடாளுமன்றத்தேர்தல் தானே. 

கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே திமுக-வையும் விஞ்சி தமிழ்நாட்டில் எதிர்கட்சி என்கிற நிலை வரை உயர்ந்த தேமுதிக அதை சரியாக பயன்படுத்தவில்லை.  போதாத குறைக்கு 6 கட்சிகளுடன் பாஜக போன்ற தேசியகட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும் அதன் வாக்கு வங்கி பாதியாக சரிந்துவிட்டது.

நானறிந்த வரையில் ராமசுப்பு  நல்ல மனிதர்.  சில மாதங்களுக்கு முன்பு கூட செய்திதாள்களில் எல்லாம் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டோருக்கு விருது வழங்கப்பட்டதைக் குறித்தான செய்திகள் வந்திருந்தன.  அதில் ராமசுப்பு அவர்கள் 1000 மேற்பட்ட கேள்விகள் கேட்டதற்காகவும் பாராளுமன்ற வருகை அதிகம் இருந்ததற்காகவும் விருதுகூட வாங்கினார் என்று குறிப்பிட்டிருந்தது..  ஆனால் இதே நெல்லையில் 2009 தேர்தலில் 2,74,000+ வாக்குகள் பெற்றவருக்கு இந்தத் தேர்தலில்   நாம் தந்திருப்பது வெறும் 64,000+ வாக்குகள், 4ல் ஒரு பங்கு கூட கிடையாது.  என்ன சொல்வது?
என்று நம் மக்கள் தங்கள் கட்சி அடையாளலங்களைத் தாண்டி நல்ல மனிதரை ஆதரிக்கத் தொடங்குகிறார்களோ அன்று தான் விடியும். 
நோட்டா:
இந்தமுறை தமிழகத்தின் பல தொகுதிகளிலும் 3-வது இடத்தைப் நோட்டா பிடத்துவிட்டது.   நீலகிரியில் நோட்டா மட்டும் 40,000+ வாக்குகளை அள்ளிக் குவித்துள்ளது.  மக்களிடம் நல்ல விழிப்புணர்வு வந்தவிட்டதைத்தான் இது காட்டுகிறது. ஆனாலும் நோட்டா முதல் இடத்தைப் பிடித்தாலும் இரண்டாவதாக வரும் வேட்பாளர் நாடளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படுவார் என்கிற தேர்தல் ஆணையத்தின் முடிவுதான் குழப்பமாகவே இருக்கிறது.  பாதிபேர் இதனாலே "யாரையும் புடிக்கிலனு நோட்டாவுல போட்டு என்னா புண்ணியம், எப்படியும் திரும்பவும் ஒரு ஃப்ராடுதான் வருவான்னா நான் வோட்டு போடாமலே இருப்பனே" என்கிறார்கள் அவர்கள் சொல்வதும் சரியாகத்தான் படுகிறது.

30 வருடங்களுக்கு பிறகு எதிர்கட்சி இல்லாத( = சக்திவாய்ந்த - ஒரு தனியான) ஒரு பாராளுமன்ற அமைச்சரவை இதுதான்.  ஆளும் கட்சி நினைத்ததை செய்யலாம், அவர்கள் நல்லதே நினைக்கவேண்டும் என்பதே நம் பிராரத்தனை. 

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும் - பாரதி

Monday, April 28, 2014

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(20-04-14 முதல் 26-04-14வரை)

ஆப்பிளின் சிரி(siri), கூகுளின் கூகுள் நவ்(Google Now) போன்ற பேச்சை கேட்டு இயங்கும் செயலிகளைத் தொடர்ந்து தற்போது வின்டோஸ் நிறுவனம் தனது வின்டோஸ் அலைபேசிகளுக்காக கோர்டானா(Cortana) எனும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.




டெக் மஹிந்திரா நிறுவனம் பெருந்தகவல்(Big Data) துவக்க நிறுவனமான(Start-up) ஃபிக்ஸ்டீரிம் நெட்வொர்க்ஸ்(FixStream Networks) எனும் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

அலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஃஎச்டிசி(HTC) சென்னையில் அமைந்திருக்கும் நோக்கியா நிறுவனத்தின் தொழிற்சாலையை வாங்கவிருப்பதாகத் தெரிகிறது.

கூகுள் நிறுவனம் கேப்ட்சா(CAPTCHA) [ ஒரு இணையதளத்தில் பயனர் கணக்கை உருவாக்கும் போதோ அதுபோன்ற மற்ற இடங்களிலோ மனிதர்களையும், கணினி பாட்(Bot)களையும் வித்தியாசப்படுத்தி Bot-களிலின் தாக்குதலில் இருந்து இணையதளத்தைப் பாதுகாக்க உதவும் ஒரு நுட்பம்]  புதிர்களை விடுவிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.  மேலும் இது 99% துல்லியத்தன்மை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மோட்டரோலாவின் இந்தியக் கிளைக்கு அமித் போனியை தலைவராக அறிவித்துள்ளது மோட்டரோலா நிறுவனம்.

மென்பொருள் நிறுவனமான காக்னிசென்ட் அமெரிக்காவைச் சேர்ந்த காணொளி/நிகழ்பட(video) நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் உலகின் முதல் 10 மென்பொருள், தகவல் தொழில்நுட்ப சேவை தரும் நிறுவனங்களில் ஒன்றாக முன்னேறியுள்ளது.

வின்டோஸ் நிறுவனம் தனது வின்டோஸ் 8 இயங்குதளத்திற்கு அதன் XP இயங்குதளத்தின் start menu போன்ற ஒன்றை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.

சீனாவை சேர்ந்த நுண்ணறிபேசி நிறுவனம் க்ஸியோமி(Xiaomi) என்கிற தனது அலைபேசியை இவ்வாண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாவின் டிராய்(TRAI - Telecom Regulatory Authority of India) அலைபேசிகளில் இணைய இணைப்பின் குறைந்தபட்ச வேகத்தின் அளவை நிர்ணயிக்கவுள்ளது.  இது நிர்ணயிக்கப்பட்டபின் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் விளம்பரங்களில் ஒரு வேகத்தையும் உண்மையில் ஒரு வேகத்தையும் தந்து வாடிக்கையாளர்களை ஏமாற்ற முடியாது.

ஐபிஎம் நிறுவனம் 50 மடங்கு வேகமான வழங்கி கணினிகளை உருவாக்கியுள்ளது.

நிஸ்ஸான் நிறுவனம் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும் வகையிலான மகிழ்வுந்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

Form-16-ம் பள்ளி நண்பனும்..

பல வருடங் கழித்து பள்ளி நண்பன்  ஒருவனை வங்கியொன்றில் சந்தித்தேன்.  கையில் Form-16-ன் நகலொன்றோடு நின்றிருந்தான்.  வங்கியில் வீட்டுக்கடன் பெறுவது தொடர்பாக விசாரிக்க வந்திருப்பதாக சொன்னவனிடம்,  "என்னடா Form-16-ல் Gross income-ல் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள்?" என்று கேட்டேன்.  அதுவா, என விளக்கம் சொல்ல ஆரம்பித்தவன், ஒரு நொடி நிறுத்தி என்னை மேலிருந்து கீழ்வரை பார்த்தான். "அது ஒரு கணக்கு உனக்குப் புரியாது..." என்றான்.  (ஐன்ஸ்டீன், "ஒரு விஷயத்தை உன்னால் மிக எளிமையாக மற்றோர்க்கு பரியும் வகையில் சொல்ல முடியவில்லையென்றால், உனக்கு அந்த விஷயம் சரியாக தெரியவில்லை என்று பொருள்" என்பார்)

எனக்கு சுர்ர்ரென்றது, உடனே அவனுக்கு வருமான வரி குறித்தான எல்லா விஷயங்கைளையும், கணக்கிடும் விதங்களையும் விளக்கி, இதெல்லாம் எனக்குப் புரியாதுதான் என்று சொல்லிவிட்டு வரவேண்டும் என்றிருந்தது.  ஆனால், என் வழமையான சிரிப்பை உதிர்த்துவிட்டு வந்தேன்.  ஒரு மூன்றாம் மனிதன்தான் அவனுக்கு தெரியாத மற்றொரு 3-ம் மனிதனை உருவம் பார்த்து எடைபோடுகிறான் என்றால், உருண்டு புரண்டு ஒன்றாய் அடி வாங்கி கள்ளமின்றி விளையாண்ட 2 நண்பர்களும் கூட நீண்டதொரு இடைவெளியில் பிரிதொரு நாளில் சந்திக்கையில் அடுத்தவனின் உடை, உருவம் பார்த்தேதான் எடை போடுவார்களா...? (நமக்கும் டிரஸ்சிங் சென்ஸ்க்கும் கொஞ்சம் தூரம் தான் இருந்தாலும்...)

ஆடம்பரமில்லா, மிக எளிமையான காந்தியும், காமராசரும் கூட இவர்களுக்கு அற்பங்கள் தாம்.  10 சுமோ, 15 xylo-வோடு, 400-600 கிராம் தங்க நகைகளோடு வரும் மனிதர்கள்தாம் இவர்களுக்குப் மாமனிதர்கள். 

கொஞ்சமாகிலும் படித்த, வருமான வரியென்றால் என்ன என்று கொஞ்சமேயறிந்த எனக்கே (என்ன பெரிய எனக்கே..?) இந்த வகையான பதில்தான் கிடைக்கிறதென்றால், நான் படித்த அதே பள்ளியில், அதே வகுப்பில் படித்து, 10-வதோடு, 12 வதோடோ படிப்பை நிறுத்திவிட்டு தள்ளுவண்டியில் சாப்பாடு விற்கும் ராஜ்குமாரையோ, ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் அருணையோ, பெட்டிகடை நடத்தும் சரவணனையோ என்ன மாதிரி இவர்கள் நடத்துவார்கள்?

Thursday, April 24, 2014

16-வது நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி யாருக்கு?


கடலூர் மாவட்டத்தின் அரசியலில் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பாமக-வும் திமுக-வும் தான் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்திவந்துள்ளது. இதற்கு பாமக கட்சியை ஆதரிக்கும் வன்னியர் இப்பகுதிகளில் அதிகம் இருப்பதுதான் முக்கிய காரணம்.  கடலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாமக, திமுக கோட்டை என்று கூட சொல்லலாம்.  சட்டமன்ற தொகுதிகளில் விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர் போன்ற பலவும் அவர்கள் கையிலேதான் இருந்து வந்தன.  இந்த நிலை தேமுதிக-வின் கன்னித் தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் அதன் கட்சித்தலைவர் விஜயகாந்தின் வெற்றியின் மூலம் மாறியது.  அதன் பிறகான சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட தேமுதிக-வின் எழுச்சி நாம் அறிந்ததே.  விருத்தாசலம் தொகுதியை தக்கவைத்துக் கொண்ட தேமுதிக, பண்ருட்டியையும் கைப்பற்றியது.  சரி பாராளுமன்ற தேர்தலிலும் இது தொடருமா என்றால், மிகச் சரியாக ஆம்/இல்லை என்று சொல்லமுடியாது.

சட்ட மன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்து எதிர்கட்சி அந்தஸ்து வரை உயர்ந்த தேமுதிக அதை சரியாகப் பயன்படுத்தியதாக தெரியவில்லை.  காலம் மாறியதோடு காட்சியும் மாறி கூட்டணி உடைந்து கந்தறகோலமாகி, பாராளுமன்றத்தேர்தலில் அதிமுக தனியாகவும், தேமுதிக சீட் பேரத்தில் கடைசியாக பாஜக கூட்டணியில் சேர்ந்து இந்த பாராளுமன்ற தேர்தலில் களம் காணுகிறது.  உண்மையில் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ கடலூர் மாவட்டத்தில்(கடலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள்) பெரிய பெரும்பான்மையோ, வாக்கு வங்கியோ கிடையாது(பாமக, தேமுதிக நீங்களாக).  ஆனால், காலம் செய்த கோலத்தில் எந்த கட்சியின் கோட்டையை நொறுக்கி தன்வசம் ஆக்கியதோ அந்த பாமக-வும் பாஜக கூட்டணியில் இருப்பதால் தேமுதிக-வின் கடலூர் தொகுதி வெற்றி வாய்ப்பு சற்றே கூடியுள்ளது என கொள்ளலாம்.  ஆனால், கள விபரங்களைப் பார்க்கும்போது தேமுதிக-வும் பாமக-வும் தங்களுக்குள் பரஸ்பரம் இணைந்து செயல்படுவதாக தெரியவில்லை.  இது கண்டிப்பாக ஒரு பின்னடைவு தான்.

எனக்குப் பரந்துபட்ட அரசியல் ஞானமோ, நேரடியாக அரசியலில் உள்ள கட்சி நண்பர்களோ இல்லை.  ஆனால், நாட்டு நலனில் அக்கறையுள்ள, கட்சி சார்பில்லாத நண்பர்கள் இருக்கிறார்கள்.  மேலே குறிப்பிட்ட இந்த நண்பர்களிடம் விவாதித்து மற்றும் என் வரையில் அறிந்த கடலூர் பாராளுமன்றத் தொகுதி கள நிலவரங்களாக நான் அறிந்துகொண்ட சில விஷயங்களாவன

1.  அதிமுக, தேமுதிக இரண்டிற்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது.  யார் வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் பெருமளவில் இருக்காது.

2.  மோடி அலை கடலூர் மாவட்டத்தில் பெரிதாக பாதிக்கவில்லை, ஆனால் காங்கிரஸ் மேல் பெரும்பாலானோர்க்கு பெரிய வெறுப்பு உள்ளது.

3.
 அ) 22-லிருந்து 30 வயதுவரை இருக்கும் வாக்காளர்களில் பெரும்பான்மையோர்(முக்கியமாக படித்த இளைஞ(ஞிகள்)ர்கள்) மாற்றத்தை விரும்புகிறார்கள்.  அவர்கள்தான் பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சி போன்றவற்றிற்கு ஒரு வாய்ப்புதரலாம் என நினைக்கிறார்கள். இவர்கள் தங்களை எந்தக் கட்சியோடும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.  

 ஆ) முதல் முதலாக வாக்களிக்கும் 18-21 வயதுவரை இருப்பவர்கள் தங்கள் நண்பர்கள், வீட்டுப் பெரியோர் சொல்லும் கட்சிகளுக்கே வாக்களிக்க விரும்புகிறார்கள்.

 இ) 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்களை ஏதாவது ஒரு கட்சியுடன் முன்னரே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.  கட்சியைத் தாண்டி மாற்றத்தை வரவேற்கும், நல்ல மனிதரைத் தேர்ந்தெடுக்கும் மனப்போக்கு இவர்களிடம் குறைவாகவே உள்ளது.

 ஈ) இளைஞர்களில் பெரும்பாலானோர் தேர்வு பாஜக கூட்டணி அதனால் கடலூரில் தேமுதிக வரலாம்.  30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர்களின் தேர்வு அதிமுக.

4. பணம் பெற்றுக்கொள்வதும், அதற்கு 'துரோகம்' செய்யாமல் ஒட்டளிக்கும் போக்கும் மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளது(மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சிக்குரிய விஷயம்).

5. ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் பணத்தின் மூலம் வாக்குப் பெறுவதில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒரு பரப்புரையோ, வீடுதேடி வந்து வாக்காளர்களை சந்திப்பதோ, கூட்டமோ, தங்கள் கொள்கைகள், வாக்குறுதிகளை சொல்வதோ வேண்டும்.  ஆனால் இந்த குறைந்த பட்ச செயல்களில் கூட அவர்கள் ஈடுபடவில்லை, டெபாசிட் கண்டிப்பாக வாங்க முடியாது.  பதியப்பட்ட ஒட்டுமொத்த ஓட்டுகளில் 2 முதல் 5% வரை பெற்றாலே பெரிய விஷயம்.

 ஆம் ஆத்மி கட்சி பற்றி பேசும் போது நண்பன் ஒருவன் 'டேய், உனக்கு தெரியும், எனக்கு தெரியும்.  எங்க சித்தப்பாவுக்கு ஆம் ஆத்மி பத்தி தெரியுமா? எங்க ஆயாவுக்கு தெரியுமா? அவங்களுக்கு தெரிஞ்சது ரெட்டல, உதயசூரியன் தான்.  ஆம் ஆத்மி கட்சில யார் நிக்கறா? அவங்க சின்னம் என்னனு தெரியனும்னா கூட நம்ம ஊர்பக்கம், தெருபக்கம் ஆம் ஆத்மி சார்பா யாராவது வந்திருக்கனுமே.. அதுக்கு கூட யாருமே வரலியே' என்றான்.  சரியென்பது போலதான் எனக்கும் படுகிறது.

சரி இப்ப conclusion என்னனா? கடலூர் தொகுதி அதிமுகவுக்கு இல்லனா தேமுதிகவுக்கு போகும்னு தெரியுது.  மே 16-ந்தேதி சாயங்காலமா கேட்டீங்கனா correct-ஆ யாருக்குனு சொல்லிடுவேன்.

Tuesday, April 22, 2014

தொழில்நுட்ப உலகம் ஒரு பார்வை

முகநூல் நிறுவனம் ஹேக் (Hack) என்கிற புதிய நிரல் மொழியை அறிமுகப்படுத்தவுள்ளது.

டிவிட்டர், தனது இசைக்கான செயலியை நிறுத்தவுள்ளது.

ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டின் செல்வாக்கு குறைந்து அதன்பிறகு கேன்டி கிரஷ்-ன் சகாப்தம் ஆரம்பித்தது.  தற்போது இவ்விரண்டையும் தாண்டி ஃபிளேப்பி பேர்ட்-ம் 2048 என்கிற எண் விளையாட்டும் மிக வேகமாக தனது பயனர் அளவினை சேர்த்துவருகின்றன.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி 5 வகை நுண்ணறிபேசிகளை மார்ச் 27 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களைத் தொடர்ந்து தற்போது சிஸ்கோ நிறுவனமும் மேகக் கணிமையில் களமிறங்கவுள்ளதாக அறியப்படுகிறது.


அலைபேசி தயாரிப்பு நிறுவனமான லாவா 2015 மார்ச் வாக்கில் தங்கள் நிறுவனத்தினை பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்ற வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஒரு நுண்ணறி contact lens -ஐ உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.  இது, மனிதனின் இரத்த குளுக்கோஸ் அளவை தானாகவே குறிப்பிட்ட இடைவெளிகளில் பதிவுசெய்துகொள்ளும் என்று கூறப்படுகிறது.  இது மட்டும் சாத்தியப்பட்டால் சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

2014-ம் ஆண்டில் உலகளவில் நுண்ணறி அலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.75 பில்லியன் அளவிற்கு அதிகரிக்கும் என்று eMarketer எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(28-04-13 முதல் 04-05-13வரை)

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட ஃபேஸ்புக்கின் ஃபேஸ்புக் ஹோம்(Facebook Home) ஆண்ட்ராய்டு ஆப்(App) வெளியிடப்பட்ட 3 மூன்று வாரங்களில் பயனர்களிடமிருந்து எதிர்மறையான பின்னூட்டங்களையேப் பெற்றுள்ளது.  கூகிளின் பிளே ஸ்டோரில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இதற்கு 1 நட்சத்திர (மொத்தம் 5 நட்சத்திரம், அதாவது 1/5 மதிப்பீடு) மதிப்பையே வழங்கியுள்ளனர்.

வாட்ஸ்ஆப் போன்ற நுண்ணறிபேசி குறுந்தகவல் பரிமாற்றிகளால் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை வழமையான குறுஞ்செய்தி அனுப்பும் எண்ணிக்கையைவிடக் கூடியுள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் தனது கூகுள் நவ்(Google Now) எனும் பேச்சு சார்ந்த நுண்ணறி தேடல் மற்றும் இன்ன பிற காரியங்களைச் செய்யும் ஆண்ட்ராய்டு அப்ளிகே ஷனை முன்னரே அறிமுகப்படுத்தியிறுந்தது.  தற்போது இதை ஆப்பிளின் ஐபோனுக்கும் இலவச ஆப்(App) ஆக தரவுள்ளது.  ஆப்பிளும் கூகுள் நவ் போல சீரி(Siri) என்ற பெயரில் பேச்சு சார்ந்த ஒரு தேடலை அறிமுகப்படுத்தியிருந்தது ஆனால் அது கூகுள் நவ் போல் சிறப்பானதாக இல்லை.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 1 மேசைக் கரண்டி தண்ணீர் மூலம் மொபைல், கேமரா போன்ற மின் சாதனங்களுக்கு மின்னேற்றம் அளிக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.  பவர்டெரெக்(PowerTrek) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவி மூலம் 3 வாட் வரை மின்சாரம் தரமுடியும் எனக் கூறப்பட்டள்ளது.

இந்திய நுண்ணறிபேசி(SmartPhone) தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ்(Micromax) தனது முதல் முப்பரிமாண(3D display) திரையுடன் கூடிய நுண்ணறிபேசியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  கேன்வாஸ் 3D(Canvas 3D) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நுண்ணறிபேசியின் முப்பரிமாண அனுபவத்தைப் பெற தனியா கண்ணாடி எதுவம் தேவையில்லை.  இதன் விலை இந்திய ரூபாய் 9,999 ஆக இருக்கும் போலத் தெரிகிறது.



மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->

தொழில்நுட்ப உலகம் ஒரு பார்வை 26-01-2014 லிருந்து 01-02-2014 வரை

டிவிட்டர் போல முகநூலும் நடப்பு நிகழ்வுப் போக்குகளை(Current Trends) இந்தியாவில் தரவுள்ளது

கொந்தர் ஒருவர் ஸ்னாப் சாட் அலைபேசி செயலியின் புதிய பாதுகாப்பு அம்சத்தை 30 நிமிடங்களில் உடைத்துள்ளார்

ரெட்ஹாட் நிறுவனம் மேகக்கணிமைக்காக பல தயாரிப்புகளை தரவுள்ளது.

டெக் மஹிந்திரா நிறுவனம் ஆள்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளது.  அதன் பணியாட்களின் எண்ணிக்கையை விரைவில் 1 லட்சம் என்கிற அளவில் உயர்த்தவுள்ளதாக அறியப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக கர்நாடக மாநிலம் அதன் தலைநகரான பெங்களூருவில் பொதுமக்களுக்கு இலவச வை-பை(Wi-Fi) இணைய இணைப்பைத் தரவுள்ளது.  இது முதலில் எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோடு, யஷ்வந்த்பூர், சாந்தி நகர் போன்ற இடங்களுக்கும் பிறகு மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் போல தெரிகிறது.

விக்கிப்பீடியா தனது புதிய முயற்சியாக முக்கிய மனிதர்களைப் பற்றிய அதன் பக்கங்களில் அவர்கள் பேச்சை இணைக்கவுள்ளது.  இதற்கு பிபிசி நிறுவனமும் தனது ஆவணக்கிடங்கில் இருக்கும் ஒலிக்கோப்புகளை கொடுத்து உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.

தேடல் நிறுவனமான கூகுள் தனது உலாவி அடிப்படையில் அமைந்த இயங்குதளமான குரோம் ஓஎஸ்(Chrome OS) கொந்தர்களைக் கொண்டு பாதுகாப்பு சோதனை(Hack) செய்யவுள்ளது.  இதற்கு பரிசாக 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பரிசாகவும் அறிவித்துள்ளது.  இந்நிகழ்வு வரும் மார்ச் மாதம் Pwnium என்கிற பெயரில் நடைபெறவுள்ளது.

யாஹூ நிறுவனம் உலாவியை அடிப்பைடயாகக் கொண்டு விளையாட்டுகளை உருவாக்கி வரும் தொடக்க கால நிறுவனமான கிளவுட்பார்ட்டி(Cloud Party) என்கிற நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஸ்கைடிரைவ்(SkyDrive) மேகக் கணிமைச் சார்ந்த நினைவக சேவையின் பெயரை ஒன்டிரைவ்(OneDrive) என்று மாற்றவுள்ளது.

கூகுள் நிறுவனம் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு சாரந்த தொடக்ககால நிறுவனமான டீப்மைண்ட்(DeepMind) என்கிற நிறுவனத்தை கையப்படுத்தியுள்ளது.

நோக்கியாவும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் மலிவுவிலை அலைபேசியை நோக்கியா நார்மாண்டி (அ) நோக்கியா எக்ஸ் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

தென்கொரிய கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை 5ஜி வலையமைப்பை உருவாக்க முதலீடாக தரவுள்ளதாக அறிவித்துள்ளது.  இந்த 5G தொழில்நுட்பமானது 4G தொழில்நுட்பத்தைவிட 1000 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் அறியப்படுகிறது.  இத்தொழில்நுட்பம் மட்டும் சாத்தியாமானால் ஒரு அதி தெளிவான திரைப்படங்களை(HD movie) உங்கள் அலைபேசியிலிருந்து சில நொடிகளில் தரவிறக்கலாம்.

இன்டெக்ஸ் நிறுவனம் 12,500 ருபாய் விலையில் வளைவான திரையுடைய நுண்ணறி அலைபேசியை வெளியிடவுள்ளது.  இது அதன் அக்வா(Aqua) வரிசையில் வரும் ஒரு அலைபேசியாகும்.

டிவிட்டர் தனது ஆன்ட்ராய்டுக்கான செயலியை மேலும் மேம்படுத்தியுள்ளது.  இப்போது இந்த மேம்பாடுகளின் மூலம் நீங்கள் பகிரும் புகைப்படங்களை திருப்புதல்(Rotate) மற்றும் வெட்டுதல்(Crop) போன்ற செயல்களையும் செய்ய முடியும்.

ஆப்பிள் சூரிய ஒளியில் மின்னேற்றம் அடையும், இரண்டு பக்கமும் திரையையுடைய ஒரு கணினி/தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை வாங்கியுள்ளதாக தகவல்கள் அறியப்படுகிறது.

2013 உற்பத்தி/விற்பனை செய்யப்பட்ட 3 அலைபேசிகளில் ஒன்று சாம்சங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்று கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இணைதளத்தின் ஈற்றுப் பெயர்களான டொமைன்கள்(Domains)  பெயரில் புதிதாக .guru, .bike போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

2013-ம் ஆண்டில் மொத்த நுண்ணறி அலைபேசிகளின் விழுக்காட்டில் 79% ஆன்ட்ராய்டினுடையது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன்.

டிவிட்டர் ஐபிஎம் நிறுவனத்துடன் 900 காப்புரிமைகளுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

சிஸ்கோ பொருட்களின் இணையத்தை(Internet of Things) மேகக்கணிமை தரவுதளங்களுடன் இசைவாக இணைக்கும் ஒரு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து பணியாற்றிவருகிறது.  இதற்கு பனிமூட்ட கணிமை(fog computing - தமிழாக்கம் சரியா?) என்று பெயரிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தான் கையகப்படுத்திய மோட்டோரோலா நிறுவனத்தை லெனோவா நிறுவனத்திடன் விற்றுள்ளது.

ஆஸ்பைரிங் மைண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வரிக்கையின் படி புதுடெல்லி, பீகார் போன்ற மாநிலங்கள் திறமையான தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களை உருவாக்குவதாகவும், தமிழ்நாடு மற்றம் ஆந்திரப்பிரதேச மாநிங்களின் மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு தகுதியற்றவர்களாகவும் இருப்பதாக கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மேகக்கணிமை சேவையான அஷூரை(Azure) மேம்படுத்த/விரிவுபடுத்த பெங்களூருவைச் சார்ந்த சிலௌடுமன்ச்(CloudMunch) என்ற தொடக்ககால நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ஃபேஸ்புக் நுண்ணறிபேசிகளுக்கான ஒரு கட்டுரைகளைப் படிக்கும் செயலியை வெளியிட்டுள்ளது.  பேப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி சமூக தளங்களிலிருந்து செய்திகளை சேகரித்து தொகுத்து வழங்கும் என்று கூறியுள்ளது.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் மைய்ன்டாரா நிறுவனத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Wednesday, April 9, 2014

மாற்றுக் கருத்து

குறிப்பு: இந்தக் கட்டுரை 2005-ம் ஆண்டு நான் கல்லூரியில் இளநிலை படித்துக்கொண்டிருந்தபோது எழுதியது.  எழுதிய தகவல்கள் அன்றைய தேதியில் சரியானவைதான்(!?) இன்று பழைய தகவல்கள் ஆகிவிட்டன(:p).  தகவல்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு சில இணைய இணைப்புகள் மற்றும் படங்களை தற்போது சேர்த்துள்ளேன்.  படித்துவிட்டு உங்கள் வாழ்த்துகள், வசவுகள், மாற்றுக் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.   சரி வாங்க கட்டுரைக்கு போலாம்....


  மனிதன் ஆப்பிளை உண்ட காலத்திலிருந்தே நன்மை தீமை அனுபவித்து யோசிக்க, சிந்திக்க கற்றுக்கொண்டான்.  மொழி உண்டானபின் பேசிப் பழகவும், பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவும் அறிந்தான்.  விஷயஞானம் அதிகரித்து முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தான். மனிதனின் நிலை உயர உயர அவனிடம் கருத்தை கேட்க ஆரம்பித்தனர் மற்றவர்கள்;  சான்றோரும் நற்கருத்துகளையே தந்தனர்.  காலத்தின் சக்கரம் சுழலும் வேகம் அதிகரித்தது.  ஒரு சிலர் மட்டுமே நல்லறிவைப் பெறமுடியும் என்ற நிலைமாறி விரும்பும் அத்தனைபேரும் நற்கருத்துகளையும், நல்லறிவையும் பெற முடிந்தது.  எல்லோரும் அறிவைப் பெற்றாலும் ஒவ்வோருவனும் தனிமனிதன் தானே,, அவனவனுக்கு எது ஒன்றைப் பற்றியும் ஒரு பார்வையும் கருத்தும் இருக்கும்தானே.  ஆற்று மீன்கள் அத்தனைக்கும் நீந்தத் தெரியும், ஆனாலும் ஒவ்வொன்றும் அதன் பாதையில் தனி வழியில் தானே நீந்துகிறது.

  அரசாட்சி நடந்த காலத்தில் மன்னரே உயரிய தலைவன் அவன் கருத்துக்கு மாற்றில்லை.  அவன் கொடுமையே புரிந்தாலும் அது தான் சிறப்பு என்றிருந்தனர்.  பலரும் கல்வி சானம் பெற்றதாலும் நன்மை தீமை புரிய ஆரம்பித்ததானாலும் அரசன் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக ஏற்க மறுத்து ஒவ்வாததை எதிர்த்து அதற்கு எதிரான கருத்துகள் சொல்லப்பட்டது.  உலகின் அத்தனைப் புரட்சிக்கும் கருத்து வேறுபாடு மட்டுமே வித்திட்டத்து.  குடிமக்கள் உணவின்றி தவித்திருக்கையில் வரியை உயர்த்தி செலுத்ததவேண்டும் என்று மன்னன் கூறுவானேயானால் கருத்து மாறுபட்டு புரட்சி வெடிக்கும்.  மன்னராட்சியில் இஷ்டத்துக்கு கருத்துகூற முடியாது.  அப்புறம் பேச, பார்க்க, நுகர கழுத்துக்கு மேல் ஒன்றும் இருக்காது.

  மன்னராட்சி அழிந்து மக்களாட்சி மலர்ந்ததும் சுதந்திர உரிமையில் பேச்சுரிமை முதன்மை பெற்றது(கருத்து கூறவா!). நமக்கு சிறிதளவு புகழ் சமூகத்தில் இருக்குமென்றால் கருத்துகூற அந்த தகுதிபோதும்(!).  நமக்கு தெரியாத துறையில் ஏதேனும்  நிகழ்ந்தால் கூட நமக்கு அதைப்பற்றி தெரியாவிட்டாலும் கூட, நாமே கருத்துகூற விரும்பாவிட்டாலும் கூட நீங்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள், இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என ஆரம்பித்து உசுப்பேற்றி அவனுக்கு தலைக்கனம் உண்டாக்கி பேசவைத்து அவன் முதுகை ரணகளமாக்கி இரவுத் தூக்கத்தை பாழ்படுத்திவிடுவர்.  சிலை வடிக்கும் சிற்பியிடம் பக்கத்து நாடு அணுகுண்டு வெடித்ததைப்பற்றியும், எழுத்தாளனிடம் வயல்வெளியில் பயிர்களில் திடீர் மருந்துகள் அடிப்பதைப்பற்றியும் கருத்துகேட்டால் என்னாகும்! பட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

  ஒரே துறையில் இருப்பவர்களிடம் மாற்றுக்கருத்து இருக்கவேண்டும்.  இல்லாவிடில் அந்தத்துறை வளராது.  சான்றோர்கள் சான்றோராயிருக்கக் காரணம் தன் கருத்துக்கு பிறர் மறுப்புகூறினால், பதில் கருத்து கூறினாலும் அதில் உண்மையிருப்பின் அதை ஒப்புக்கொளவர்.  ஆனாலும், சமூகத்தில் உயர்ந்த நிலையிலிருப்பவர்கள் தவறான கருத்துகளை சொல்லக்கூடாது.  இல்லாவிட்டால் மௌனிப்பது நல்லது.


Justus Sustermans - Portrait of Galileo Galilei, 1636
கலீலியோ கலீலி
  இந்த உலகத்தில் எந்தவொரு மனிதனுடைய கருத்துக்கும் எதிரான கருத்துடையவன் மிக குறைந்த அளவாய் ஒருவனாயும், மிக அதிக அளவாய் அவனைத்தவிர்த்த எல்லோருமாகவும் கூட இருக்கலாம்.  "உலகம் உருண்டை" என்ற கலிலியோவின் கருத்துக்கு அவரைத்தவிர அத்தனைபேரும் எதிராய்தானே இருந்தனர்.  இன்றும் கூட "உலகம் தட்டை"* எனக்கூறுவோர் சங்கம் அமைத்து உறுப்பினர்களாய் உள்ளனர்.  ஒருக்கால் நம் கருத்துக்கு எதிர்கருத்து மாறானதாய் உண்மைக்கு ஏற்பில்லாததாய் இருப்பினும் அதை 'இது என் கருத்து, அது உ(ன்)ங்கள் கருத்து' அவ்வளவே என ஏற்கும் மனப்பக்குவம் எல்லோருக்கும் வரவேண்டும்.  இதை எட்டும் நாளில் ஒவ்வோருவரும் அறிவிற் சிறந்த சான்றோனாய், சகிப்புத்தன்மை உடையவனாய் மாறலாம்.




Lakshmimittal22082006
லட்சுமி மிட்டல்
By Ricardo Stuckert/PR (Agência Brasil [1])
[CC-BY-3.0-br], via Wikimedia Commons
  நம் கைவிரல்களையே எடுத்துக்கொள்வோம், ஒன்று கட்டையாய் குட்டையாய், ஒன்று சப்பையாய் குட்டையாய், ஒன்று நெட்டையாய் இருக்கிறது.  ஐந்துவிரலும் கட்டைவிரல் பொலவோ அல்லது நடுவிரல் போல நீண்டு இருப்பின் எப்படியிருக்கும் யோசித்துப் பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கிறது இல்லையா?.  கருத்து மாறுபாடுகள் அனைத்தும் வளர்ச்சிக்கு அடியுரங்கள்.  உலகின் இரும்புமனிதர் லட்சுமி மிட்டல் ஒருமுறை ஒரு நாட்டில் மிக நஷ்டத்தில் மூலப்பொருட்கள் கூட கிடைப்பதற்கு சிரமாயுள்ள ஒரு இரும்பு ஆலையை வாங்க முடிவுசெய்தார்.   உலகின் அத்தனை தொழிலதிபர்களும், தொழில்நுட்பவாதிகளும் இரும்பிலே ஊறியவர்களும் (எப்படி?)   அந்த தொழிற்சாலையைப் பார்த்து விட்டு இதை வாங்குவதும் கல்லைக் கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதும் ஒன்று என்றனர்.  ஆனால், அதற்கு நேர்மாறான கருத்தோடிருந்த மிட்டல் அந்த தொழிற்சாலையை வாங்கி ஒராண்டு காலத்திற்குள்ளேயே இதை லாபமீட்டும் ஒருதொழிற்சாலையாக மாற்றினார்.  'கருத்து வேறுபடும்போது நம் கருத்தில் வெற்றிபெற வேண்டும் என்கிற உத்வேகம் தோன்றி ஒன்றுக்கு நான்காய் அதற்காக உழைப்போம், சிந்திப்போம், செயல்படுவோம்.  இவை அனைத்தும் வளர்ச்சிக்குண்டான குணங்களாயிற்றே...


  நம் நாட்டின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதீபதியாக இருந்து ஒய்வுபெற்ற ஆர். சி. லகோதி அவர்கள் தூக்கு தண்டனை இருக்கவேண்டாம் என்கிறார்.  புதிய தலைமை நீதிபதி ஒய். கே. சபர்வால் வேண்டும் என்கிறார்.  இருவரும் அடித்துக்கொள்ளவில்லையே.   அது உங்கள் கருத்து, இது என் கருத்து என ஏற்றுக் கொள்கின்றனரே.  அதனால் தான் அவர்கள் சான்றோர், அந்த மனப்பாங்கே அவர்கள் இந்த நிலைக்கு உயரக்காரணம்.

மாற்றுக்கருத்தைக் கொண்டிருப்பினும் அதில் பிடிமானமாக இருப்பவர்கள் தங்கள் கருத்தை நிலைநாட்டுகிறார்கள் அதாவது வெல்கிறார்கள்.  தனது ஆசிரியர் சொல்லியும் அதை நம்பாத நீல்ஸ்போர்(Niels Bohr)-ம் , பௌலி(Wolfgang Pauli)-ம் அணு இப்படி இருக்கும் என கூறி அவர்களுடைய ஆசிரியரின் கருத்தினின்று மாறுபட்டு (அதாவது இதுவரை எலக்ட்ரானையோ அணுவின் மற்ற பொருள்களையோ, எலக்ட்ரானின் சுழற்சியையோ யாரும் கண்டதில்லை (நான் அறிந்தவரையில்) ஆகவே அவை அனைத்தும் கருத்துகள்தான்)  அதை நிருபித்து அதற்காக நோபல் பரிசும் பெற்றார்களே..  இந்த வளர்ச்சி கருத்து மாறுபாட்டினால் தானே கிடைத்தது.  ஆகவே, ஒரு துறையில் இருப்பவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு/மாறுபாடு வரவேற்கத்தக்கது.  (அது கைகலப்பாகாத வரையிலும்  வீம்புக்கு இல்லாதவரையிலும் :) )

"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" அல்லவா.  நம் நீதிபதிகளின் கருத்தைப் பற்றிக் கூறும்போது இது நினைவிற்கு வந்தது.  இது எப்போதோ, எதிலோ படித்தது.  வெளிநாடு ஒன்றில் நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து நாளேடுகளில் செய்தி வந்திருந்தது.  அந்த செய்தி,  "தீர்ப்பளித்த நீதிபதிகள் அனைவரும் வயோதிக, மறதிநிறைந்த முட்டாள்கள்" என இருந்தது.  இது குறித்து அவர்களிடம் கருத்து கேட்கையில்  அவர்கள்அளித்த பதில், "நாங்கள் வயோதிகர்கள் என்பது உண்மை, அதனால் எங்களுக்கு மறதியிருப்பதும் ஓரளவு உண்மை.  நாங்கள் முட்டாள்கள் என்பது அவர்களுடைய கருத்து".  இப்படி கூறும் அல்லது ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு உண்டா என்றால் இல்லை என்பது தான் முடிவான பதிலாக அமையும். 

உலகில் அத்தனையும் இரண்டு நன்மை-தீமை, பகல்-இரவு, ஒளி-இருள்... இப்படி பல.. எனில் கருத்துமட்டும் ஒன்றாக இருக்கவேண்டுமா என்ன?  ஒரு நாணயத்திற்கே 2 பக்கங்கள் உண்டு எனில் கருத்துக்கு கண்டிப்பாக பல பக்கங்கள் இருக்கத்தான் செய்யும், அதை ஏற்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வோம்.  சகிப்புத்தன்மையோடு மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளித்து முன்னேற்றத்திற்கு வித்திடுவோம்.  என்ன என் கருத்தை ஒத்துக்கொள்கிறீர்களா...? ;)


*  உலகம் தட்டை என நம்பும் சங்கம் குறித்த மேலதிக தகவலுக்கு ஆங்கில விக்கி கட்டுரை
அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் The flat earth society .



Thursday, April 3, 2014

கவிதை

ரசிக்கத் தெரிந்தவனுக்கு
ஞானப்பழம்

ரசிப்பில்லாதவனுக்கு
தெரியாத மாயம்

புரியாதவனுக்குப்
புதிர்

புரிந்தவனுக்கும்
கைவராக் கலை

எழுத்தாளனுக்கும்
எட்டா இமயம்

கவிஞனின்
பரம்பரைச் சொத்து

வளைந்து, நெளிந்து
நின்று, நீண்டு
குறுகி, மீண்டு
விழுந்து எழுந்து
ஆனால் இளமை
குன்றா, இறவா
வார்த்தை சித்து.

Wednesday, April 2, 2014

மேற்படிப்பும் தமிழும்


வாழ்வில் மேலும் மேலும் முன்னேற எல்லோரும் மேற்(படிப்பு) படிக்கின்றனர்.  பள்ளிவரை தமிழில் படித்தவர் கூட கல்லூரியில் ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.  தமிழ்மீது தீராத காதல் கொண்டவர்கூட மேற்படிப்பில் நிர்பந்தத்தின் காரணமாக ஆங்கிலத்தில் படிக்க நேரிடுகிறத்து.  அந்தச் சமயத்தில் பணத்துக்காக தன் காதலியை கைகழுவிவிடுபவன் போல சற்றும் வெட்கமின்றி தன் தாய்மொழியாம் தமிழை கைவிட்டுவிடுன்றனர்.  அதற்கு காரணமாக நான் காலத்தோடு இயைந்து வாழ்கிறேன் என்று கதை வேறு.

சீனர்களும், ஜப்பானியர்களும் நம்மைவிட தொழில் நுட்பத்தில் மூத்தோர்களாய் இருக்கின்றனர் காரணம் ஒன்றே ஒன்றுதான் அவர்கள் அனைவரும் எந்தப் பாடமாயிருப்பினும், தொழில்நுட்பமாயிருப்பினும் தம் தாய்மொழியிலேயே கற்கின்றனர்.  ஒரு கருத்தில் நான் மிக உறுதியாய் இருக்கின்றேன், எந்தவொரு மனிதனும் வேறந்த மொழியைவிடவும் தன் தாய் மொழியில் எந்தவொருவிஷயத்தையும் தெளிவாகவும், ஆழமாகவும் புரிந்துகொள்ளலாம்.  அதனால்தான் ஜப்பான் தொழில்நுட்பத்ததில் அமெரிக்காவிற்கே சவால் விடுகிறது.  மூளைவளம் உள்ள இந்தியா அடிமைபோல் அதற்கு சேவகம் செய்கிறது.

ஒரு தமிழன் ஜப்பானுக்கு வேலைக்குச் செல்ல ஜப்பானிய மொழியையும், சீனத்ததிற்கு செல்ல சீனமொழியையும் கற்கிறான்.  தமிழ்நாட்டில் வேலைசெய்ய ஆங்கிலம் கற்கும் அவலம் நம் தமிழ்நாட்டில் தவிர (இந்தியா) வேறெங்கும் நடக்காது.  கேட்டால் இங்கு எனக்கு வேலையில்லை,  நான் என் வாழ்வை வளமாக்க மேலைநாட்டுக்கு செல்கிறேன் என பதில் வருகிறது.    ஏன் வேலை தேடுகிறாய் உருவாக்கு.  அமெரிக்க NASA-ல் 35% மேல் இந்தியர்கள் உள்ளனர்.  அமெரிக்க Microsoft -ல் 40% மேல் இந்தியர்கள்.  பில்கேட்ஸே தன் திருவாய் மலர்ந்து தனது கம்பெனியில் வேலைபுரியும் இந்தியரனைவரையும் அமெரிக்க அரசு வெளியேற்றினால் நான் எனது கம்பெனியையே இந்தியாவுக்கு மாற்றிவிடுவேன் என்கிறார். 

ஜப்பானில் வேலை பார்க்க ஜப்பானிஸ் கற்கும் தமிழன் தன் தாய்மொழி தமிழை வெறுத்து ஏதோ பேசத் தகாத வார்த்தைபோல் கூனுகிறான்.  இது தன் வீட்டில் சுடச்சுட உணவிருக்கையில் பழைய  எச்சில் சோற்றுக்கு கையேந்தும் நிலைக்கு ஒப்பாகும்.  247 எழுத்துக்கொண்ட உலகில் தொன்மையான, இயற்கையோடு இயைந்து உருவான தமிழை கற்க வெறுத்து 1000-த்திற்கும் மேற்பட்ட எழுத்துகொண்ட சீன, ஜப்பானிய மொழியைப் பேசத்துணிகிறான் தமிழன்.  தாய்மொழியில் பேசினால் தண்டனைதரும் அவலங்கள் நடந்தேரும் பள்ளிக்கோயில்கள் பலநிறைந்த புண்ணிபூமி தமிழகம், ஆள்வோரும் அதை ஆதரித்தது வளர்க்கும் அற்புதம் நிறைந்த பெரும் பேரருள் நிறைந்த புண்ணிய பூமி தமிழகம்.  தொன்மையும், இலக்கண, இலக்கிய வளமும் நிறைந்த இளமை குன்றாத மொழி தமிழ்.  பல ஆயிரக்கணக்கான மொழிகள் கால ஓட்டத்தில் முதலில் வரி வடிவமிழந்து, பின்னர் ஒலிவடிவிழந்து இறுதியில் வழக்கொழிந்து போய் விட்ட காலத்தில்,  தன்னின்று பல மொழிகளை உருவாக்கி தன் தனித்தன்மை சிறிதும் குன்றாமல் சிற்சில மாற்றங்களை ஏற்று "என்றும் பதினாறாய்" மொழியுலகின் மார்கண்டேயனாய் தமிழ்மட்டும் திகழ்கிறது.

மெல்லத் தமிழ் இனிச் சாகும்   -  பாரதிதாசன்

தமிழ் சாகாது, சொல்கிறவர்கள் சாவார்கள்   -   மு. மேத்தா


இரண்டில் எது நடக்கும்.....?   காலம் மட்டுமே பதிலை அறியும். 
(அங்களாய்ப்பில் மனம் வெதும்பி பாரதிதாசன் அப்படிக் கூறியிருப்பார்.  தமிழ் சாகின்ற ஒரு நிலை வருமென்றால் - அது உலகின் கடைசி மனிதன் சாக நேரும்போதுதான் நடக்கும்...)

குறிப்பு:
   இந்தக் கட்டுரையும் குறைந்தது ஒரு 6 வருடங்களுக்கு முன்பு எழுதியது, அதில் நான் திருத்தமேதும் செய்யாமல் அப்படியே இந்த இடுகையில் தந்துள்ளேன்.
உங்கள் வாழ்த்துகள், வசவுகள் ஏதாவது இருந்தால் இரண்டையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... ;)

Tuesday, April 1, 2014

கடந்த 50 ஆண்டுகளில் கணிணி, தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி.

  இந்தியாவின் முதல் கணிப்பொறியின் பெயர் உரல்(Ural), ஆம் பெயரைப்போன்றே பெரிதான ஒன்று.  ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதே தற்போது முழுமையாக தகவல் தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்துள்ளது.  உலகத்தில் மாற்ற முடியாத ஒன்றான மாற்றத்தை ஏற்றுக்கொண்டு புதுவழியில் பயணிப்பவர்களே மிகச்சிறந்த சாதனைகளைப் படைக்க முடியும்.  இது தனி மனிதற்கு மட்டுமல்ல ஒரு முழு தேசத்திற்கும் பொருந்தும். 

உலக வரலாற்றில் மிகச்சிறந்த நூற்றாண்டாக ஒன்றிருக்குமானால் அது கணிணி கண்டறிப்பட்டட நூற்றாண்டுதான்.  வேறெந்த நுட்பமும் ஏதேனும் ஒருசில துறையில் மட்டுமே வளர்ச்சிக்கு வித்திடும்.  உதாரணமாக நீராவி எஞ்சின், அணுக்கரு வினைகள், ராக்கேட் இன்னும் பல.  ஆனால், தகவல் தொழில்நுட்பம் மட்டுமே எல்லா துறைகளிலும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வித்திட்டு ஒரு தேசத்தையே உயர்த்தும். 

19-ம் நூற்றாண்டுவரை மாட்டுவண்டியில் நகர்ந்து கொண்டிருந்த மனிதகுல வளர்ச்சி 20-ம் நூற்றாண்டில் இராக்கெட் பிடித்து ஒளிக்கு நிகரான வேகத்தில் முன்னேற ஆரம்பித்துவிட்டது.  தத்தித்தடுமாறி தவழ்ந்த மனிதகுலம் எஸ்கலேட்டரில் ஏறி ஓட ஆரம்பித்துவிட்டது. 

இன்று ஜப்பானும், கொரியாவும் விண்ணை முட்டி உயர்ந்து வருகின்றனவென்றால் காரணம் தொழில்நுட்பம் தானே.  அமெரிக்காவே அஞ்சுகிறான் என்றால் காரணம் அதுதானே.  50 வருடத்திற்கு முன்பு வளைகாப்பிற்கு சேதி அனுப்பினால் சேதி கிடைத்து வருவதற்குள் பிறந்த குழந்தைக்கு பல் முளைத்துவிடும்.  இன்றைய நிலைமை எப்படியிருக்கிறது?  அமெரிக்காவிலிருப்பவனுக்கு கூட அடுத்தநொடியே செய்தி அனுப்பிவிடலாம் காரணம்  e-mail.  "இங்க சேதி தட்டுனா அங்க தெரியும்...."

பக்கத்து மாநிலத்துக்கு பேசவேண்டுமென்றால் கூட Trunk call-ல் காத்திருக்க வேண்டும்.  இன்று பக்கத்து நாட்டிற்கு ஏன் பக்கத்து கண்டத்ததிற்கே பட்டென பேசிவிடலாம்.  அன்று ஊருக்கு ஒரு டெலிபோன், இன்று ஊரெல்லாம் செல்போன்; அன்று கல்யாணம், திருவிழா, சடங்குக்கு ஒரு அவசர தந்தி இன்று மாடியிலிருந்துகொண்டு கீழேயிருப்பவனுக்கு கீழேயிறங்கி வருவதற்குள் அனாவசிமாக ஒரு நூறு sms கள்.

"பிறந்த 5 மாதங்களில் ஒரு குழந்தை இரு கால்களில் மாராத்தான் ஓட்டம் ஓட முடியுமா? சாத்தியமேயில்லை!"  ஆனால், கணிணி துறையில் எதுவும் சாத்தியம் இல்லையா? அதனால்தான் கணிணி துறை, தான் பிறந்த 50 வருடகாலத்தில் இவ்வளவு வேகமாக மாராத்தான் ஓட்டத்தில் முன்னேறி வருகிறது.  ஒரு அறையே ஒரு முழு கணிபொறியாய் இருந்த காலம் மாறி இன்று அறைமுழுவதும் கணிணியாய் மாறியதோடு நில்லாமல் செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல கனகச்சிதமாக Laptop வடிவம் பெற்றுவிட்டது.  vacuum tube-களில் அடைபட்டுக் கிடந்த கணிணி தன் தடைகளை தகர்த்து வெளிவரும் ஜல்லிக்கட்டு காளைபோல சீறிப்பாய்ந்து சிறிய சிலிக்கன் சிப்புகளில் உலகையே வலம்வந்து கொண்டிருக்கிறது.

ஒரு முழு அறையில் vacuum tube -களில் மூச்சுத்திணறிக்கொண்டும், பலவித வயர்களில் கை, கால் கட்டுண்டும் சிக்குண்டும் கிடந்த கணிணி இன்று Laptop ஆகி சுதந்திரகாற்றை உற்சாகமாய் சுவாசித்துக் கொண்டிருக்கிறது.  வந்த புதிதில் உடல் பெருத்த மூளை வளர்ச்சி மட்டும் குறைவாயிருந்த கணிணி (நினைவகத்தைக் குறிப்பிடுகிறேன்) மொத்த மெமரியே ஒரு சில MB களாய் இருந்தது மாறி இன்றோ 200, 300 GB கொண்ட கணிணிகள் கூட வந்துவிட்டன.  சவலைக் குழந்தையாயிருந்த கணிணி சரிவிகித உணவு உண்டு சவால் விடுகிறது.

மூட்டை மூட்டையாய் விதைநெல் மட்டும் இருந்தால் போதுமா? விதைத்து விளைவிக்க, செயல்படுத்த நிலம் வேண்டாமா?  RAM -ஐக் குறிப்பிடுகிறேன்.  16 MB  அளவிருந்த RAM-ன் அளவு வேகவேகமாய் வளர்ந்து பல GB அளவுக்கு வந்துவிட்டது.  அத்தனையும் கடந்த ஐம்பதே வருடங்களில்.  குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் என்பதை கதைகளில் கேட்டிருப்போமில்லையா நேரில் கணிணியாக பார்க்கலாம்.  தன்னை உருவாக்கிய மனிதனைவிட அனைத்திலும் முன்னேறிவிட்டது.  என்ன அருகிலிருக்கும் சக கணிணியைக் கண்டு கண்ணடிக்கவோ, கடலை போடவோ, sms அனுப்பவோ முடிவதில்லை.  காரணம் தானே சிந்திக்கவோ முடிவெடுக்கவோ தெரியாததுதான். அதையும் நிவர்த்தி செய்ய "Artificial Intelligence" அறிஞர்கள் முயன்றுவருகிறார்கள்.

பெரிய CRT-களில் சிக்குண்டு கிடந்த கணிப்பொளி diet மூலம் slim ஆகி அழகாகும் நடிகைபோல LCD-யாய், Plasma Display-வாய் பேப்பர் ரோஸ்ட் போல மாறிவருகிறத்து..  தொட்டுப்பேச Touch-panel ஐ போல வந்துவிட்டது. 

அறிவியல் கதை எழுதுபவர்களால் கூட கற்பனை செய்து வளர்ச்சியை கதையாய்  எழுதமுடியவில்லை.  எப்படி என்னவிதமாய் வளர்ச்சியில் விஸ்வரூபம் காணும் என கணிக்கமுடியவில்லை.  எப்பொழுதேனும் சிறு மாற்றத்தடையால் தடுக்கிவிழுந்தாலும் அதையே தன் வளர்ச்சிக்கு அடையாள மைல்கல்லாய் நாட்டி தன் பெருமையை நிலைநாட்டி முன்னேறி ஓடிக்கொண்டிருக்கிறது கணிணி.  கணிணி துறைக்கு வரும் தடைக்கற்குவியல்கள் அனைத்ததும் பூக்குவியலாய் மாறி அதன் பாதையிலேயே பூமாரி பொழிகிறத்து. 

ஆறுகளனைத்தும் சங்கமிக்கும் கடல்போல கணிணி எல்லாதுறைகளும் சங்கமிக்கும் hub-ஆகி வருகிறது.  கணிக்கிடும் பொருட்டு ஒரு calculator ஆக பிரசவித்து இன்று பலசரக்கு கடையில் bill-போடுவதிலிருந்து இராக்கெட்டை ஏவும் தொழில்நுட்பம் முதல், அதை கண்காணிக்கும் வரை அனைத்ததையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து "மௌனக் கடவுளாய்" சிலைக்குப் பதில் சிலிக்கான் சில்லில் பூஜை புனஸ்கார நிவேத்தியத்திற்கு பதில், சங்கு, சக்கரம், கதை, வேல், வில்லிற்குப் பதில் CPU, RAM, ROM, Mouse கொண்டு உலகையே ஒரு குடையின் கீழ் ஆட்சிபுரிந்து வருகிறத்து.  அலேக்சாண்டர் இன்றிருந்தால் உலகை வெல்லுவதற்குப் பதில் கணிணிக்கு copy right-ம், patent-ம் வாங்கதான் போராடுவாரென்று எண்ணுகிறேன்.

இன்று கணிணி இல்லாவிடில் உலகமே ஸ்தம்பித்து நின்றுவிடும் எனும் அளவுக்கு எல்லா துறைகளிலும் புகுந்து ஊடுருவி வளர்ச்சியடைந்துள்ளது.   'அவனின்றி அணுவும் அசையாது' என்ற நிலைமாறி 'கணிணியின்றி எதுவும் அசையாது' என்ற நிலைவந்துவிட்டது. 

இன்றும் கணிணி Information Technology, Artificial Intelligence, Nano technology என்று பலவித முகங்களோடு மென்மேலும் வளர்ந்துவருகிறது.  மண்ணைத்தோண்டும் geology முதல் விண்ணைத் தீண்டும் Astronomy வரை தாவரத்தை பற்றிய botany முதல் மனிதனை ஆராயும் microbiology, Biotechnology  வரை எல்லாதுறைகளிலும் தன் கரத்தை நீட்டி வளர்ந்து வருகிறது. 

எந்தவொரு வளர்ச்சியிலும் நன்மை, தீமை இரண்டும் இருக்கும்.  தீமைகள் பலவும் இருக்கும் நாம் தீய முன்னுதாரணங்களைத் தவிர்த்து நல்ல முன்னுதாரணங்களை மட்டும் மனதில் கொண்டு நீர் கலந்த பாலில், பால்மட்டும் அருந்தும் அன்னமாய் இருப்போம்.  கணிணி அப்படி தீமைக்கு வித்திட்டடாலும் அதற்கு மனிதன்தான் காரமேயன்றி கணிணியோ தகவல் தொழில்நுட்பமோ காரணமில்லை.

உலகின் தலைசிறந்த ஒரு துறைக்கு நான் என்னளவில் எந்த பங்களிப்பும் தராவிட்டாலும் அந்தத்துறையைச சேர்ந்த ஒருவனாய் இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தான்.  நம்மால் முடிந்தளவு கணிணித்துறையின் வளர்ச்சிக்கு பங்களித்து அவ்வளர்ச்சியை நேர்வழியில் நல்லமுறையில் பயன்படுத்தி நாட்டுக்கு வளம் சேர்த்து நமக்கும் பலம் சேர்த்தது நாம் பிறந்த இந்நாட்டுக்கு உலகளவில் நற்பெயர் பெற்றுத்தரவேண்டும் என வேண்டி

'நீயும் நானும் ஒண்ணு,
காந்தி பிறந்த மண்ணு'


என்கிற உலகை மாற்றிப்போட்ட கவிதை வரியோடு இக்கட்டுரையை முடிக்கிறேன்.

குறிப்பு:
   இந்தக் கட்டுரை குறைந்தது ஒரு 6 வருடங்களுக்கு முன்பு எழுதியது, அதில் நான் திருத்தமேதும் செய்யாமல் அப்படியே இந்த இடுகையில் தந்துள்ளேன்(சில காரணங்களுக்காக).  எனவே, மிகவும் பழைய தகவலோடு இருப்பதாகவோ அல்லது தகவல் பிழை இருப்பதாகவோ கருத வேண்டாம், கண்டிப்பாக இது பழசு தான்.

Friday, March 21, 2014

குக்கூ, வட்டியும் முதலும், ராஜுமுருகன் ....

நண்பனிடம், "நீ வராட்டாலும் நான் கண்டிப்பா குக்கூ படம்பாக்கப் போவேன்டா" என்றேன்.  "ஏன்?" என்றான்.  படத்தின் (கதை மற்றும்)இயக்குனர் ராஜுமுருகன் அதனால் என்றேன்.  அவனுக்கு ராஜுமுருகனைத்தெரியாது, "யார்?" என்றான்.  "எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்(இன்னும் பலர் இருந்தாலும், ராஜுமுருகனினைப் பற்றிக்கூறும் போதே தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வரும் மற்றொருவர் எழுத்தாளர் சுகா)" என்றேன்.

ராஜூமுருகனைப் படித்தவர்களுக்குத்("வட்டியும் முதலும்") தெரியும், அவர் எழுத்தின் வலிமை எப்படிப்பட்டதென்று,  மனதின் அடி ஆழம்வரை சென்று தொட்டுப்பாரக்கக் கூடியது அவரின் எழுத்து, படித்துக்கொண்டிருக்கும்போதே வாசகனை அழ வைத்துவிடுவார்.  ஆனால், அவர் எழுத்து முழுவதுமே அவர் பார்த்த/அனுபவித்த/நிகழ்வின் ஒரு பகுதியாய் இருந்த/கேட்ட (குறிப்பாக சாமானிய மனிதர்களின்) அனுபவங்கள் மட்டுமே.  "குக்கூ" படத்தின் டிரெய்லரே பலரின் மனதையும் தொட்டுச் சென்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 


அலுவலக நண்பர் ஒருவர் இன்று படம் 'பார்த்துக்கொண்டிருக்கும் போதே'  அலைபேசியில் அழைத்தார்.  "படம் அற்புதம், கொஞ்சம் ஸ்லோ... ஆனா அட்டகாசம்... படத்துல ஹீரோ, ஹீரோயின் சேரணும்னு படம் பாக்குற எல்லாரோட மனசும் கிடந்து அலையுது" என்றார்.   கூடவே படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தார்.  "பாஸ் ப்ளீஸ், தயவு செஞ்சு கதைய எனக்கு சொல்லிடாதீங்க" அப்படியென்று சொல்லிவிட்டேன்.

Wednesday, March 5, 2014

பேசாம நீங்க டீம் லீடர் ஆயிடுங்க... என்ன?

நண்பன் ஒருவன் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறான், பக்காவான ஆள், அற்புதமாக வேலை பார்ப்பான், ஆனால் இந்த மெயில் அனுப்புவது, டைப் அடிப்பது, டாக்குமென்ட் அடிப்பது இதெல்லாம் அவனுக்கு சரிபட்டு வராது.  அவன் இருக்கும் புராஜெக்ட் டெட்லைனை நெருங்கிக்கொண்டிருப்பதால் பணிப்பளு அதிகமாயிருப்பதாக கூறியிருக்கிறான். 

ஒருநாள் அவன் கேண்டினுக்கு சாப்பிடப்போயிருக்கும் போது அவனுடைய டீம் லீடரும் அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார்,  நண்பனை அழைத்து, "பேசாம நீங்க டீம் லீடர் ஆயிடுங்க குருசாமி" என்றிருக்கிறார் (பாவம் அவருக்கு என்ன குடைச்சலோ?).  அதன் பிறகான உரையாடலைப் பாருங்கள்/படியுங்கள்.

"வேணாம் சார்.."
"ஏம்பா... வேணாங்கற..?"
"சார், நான் இன்னும் ஒரு 3 வருசமாவது இன்போசிஸ்-ல வேலைல இருக்கனும்னு நினைக்கிறேன்..."
"புரியலையே, என்னப்பா சொல்ல வர்ற?  அதுக்கும் டீம் லீடர் ஆகறத்துக்கும் என்ன சம்பந்தம்?"
"இல்ல, என்னோட பழைய கம்பெனில என்ன டீம் லீடர் ஆக்கப்போறேன் சொல்ல ஆரம்பிச்சதுலேர்ந்துதான் நான் புது வேல தேட ஆரம்பிச்சேன்.. அப்ப நான் அந்த கம்பெனில சேந்து 2 வருசம்தான் ஆயிருந்துச்சு.  எப்ப, கிட்டதட்ட டீம் லீடர்னு கன்பார்ம் பண்ண முடிவெடுத்தாங்களோ, அப்பதான் இன்னும் வேகமா வேல தேடி இன்போசிஸ்ல வந்து சேர்ந்தேன் அதான்"
டீம் லீடர் (சிரித்துக் கொண்டே) "சரி சரி... "

என்று அனுப்பிவிட்டார்.

அப்புறமா விவரம் கேட்டாதான் சொல்றான், அவர் "ஏன்... வேணாங்கற..?" னு கேட்ட உடனே "அது ஒரு மொக்க வேல சார்"-னு பதில் தொண்ட வரைக்கும் வந்துடுச்சி,
எப்படியோ கண்ட்ரோல் பண்ணி எச்சிலோட முழுங்கிட்டேன்.  "மனுசன் பாப்பானாடா இந்த டாக்குமெண்ட அடிக்கிற வேலைய? மொக்க வேலடா அது" அப்படின்னான்.

Tuesday, February 11, 2014

படித்த புத்தகம் - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 'சத்திய சோதனை'


புத்தகத்தின் அட்டையிலேயே குறிப்பிட்டுவிடுகிறார்கள் 'சமகால அரசியல் நிகழ்வுகளைப் புதிய கோணத்தில் அணுகும் அரசியல் அங்கத நாவல்' என்று.

ஒரு அரசியல்வாதி அவருடைய சுயசரிதையை எழுதும் கோஸ்ட் எழுத்தாளர் (Ghostwriter) ஒருவர், அரசியல்வாதியின் நண்பர், ஒரு கொலை, அரசியல், போலிஸ், துரோகம் இவ்வளவையும் வைத்து சமகால(என்றால் 1980-களில்) அரசியலை விறுவிறு திரில்லராக 136 பக்கங்களில் சித்தரித்து உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் இபா. 

அரசியல்வாதி பிரும்மநாயகம் (சிவஞானம்)
(கோஸ்ட்) எழுத்தாளர் வாசு
அரசியல்வாதியின் நண்பர் தணிகை
போலிஸ் ஆலிவர்
போன்று வெகு சில பாத்திரங்களே கதையில் வந்தாலும் தேவையில்லாத நீட்டல் முழக்கள்கள் இல்லாமல் அதேசமயம் ஒடைபோல தெளிவாக கதை நகர்ந்து கொண்டேயிருக்கிறது.

புத்தகத்தின் சிறப்பு அதன் விறுவிறுப்பும், எளிய நடையுடன் கூடிய யதார்த்தமும்தான் அதனால் புத்தகத்தை கீழே வைக்கவே மனம் வரவில்லை, புத்தகத்தை 2-3 நாட்கள் எல்லாம் வைத்து படிக்க வேண்டியதில்லை.. சேர்ந்தார்போல் ஒரு 1-11/2 மணிநேரம் இருந்தால் போதும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம்.  எழுத்தாளனாய் வாழ்வது, அதுவும் சமூக அங்கீகாரம் இல்லாத எழுத்தாளனாக வாழ்வது எவ்வளவு வேதனையானது என்று ஆங்காங்கே வாசுவின் கதாப்பாத்திரம் குறிப்பால் உணர்த்துகிறது.  10-20 வருடங்களுக்கு முன் வந்த கதையிலேயே கௌரவ டாக்டர் பட்டம் என்ன பாடு படுகிறது என்பது தெரிகிறது.  இன்றைய நிலைமையை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.  அரசியல்வாதிகளுக்கு பணம் டிரஸ்ட் வழியாகப் போவது, அதிகாரமும் பதவி மோகமும் எப்படி ஒரு மனிதனை மாற்றும் என்பதும், சாதரணமாக மிகச்சாதரணமாக வாழ்கையை ஆரம்பக்கும் அரசியல்வாதிகள் பெரிய நிலையை எட்டுவதும் பின்னர் தங்கள் பழைய அடையாளங்களை மறைத்து அல்லது திருத்திக்கொள்வது, கட்சி அரசியல் ஜாதிக்கார வேட்பாளர், இடைத்தேர்தல், கிட்டத்தட்ட இன்றைய பேய்டு நியூஸ் (paid news) களை நினைவுப்படுத்தும் பத்திரிக்கை நிகழ்வுகள், கோப்புகளை திருத்துவது என எல்லாமே இருக்கிறது கதையில் இதில் பலவும் இன்றுவரை மாறவில்லை என்பதும் நிதர்சனமே.

கதையில் தென்னாற்காடு மாவட்ட (இன்றைய கடலூர் மாவட்டம்) இடைத்தேர்தலும் அதற்கு படையாச்சி(வன்னியர்) வேட்பாளர் நிறுத்துவது குறித்தும் செய்தி வருகிறது. இன்றும் கடலூர், விழுப்புரம் போன்ற வட தமிழக மாவட்டங்களில் இப்படி ஜாதி அரசியல் நடப்பதும், வேற்று கட்சியினரும் குறிப்பிட்ட சாதி வேட்பாளரையே தங்கள் சார்பில் நிற்க வைப்பதும்  எல்லோரும் அறிந்ததே.

நறுக்கு தெரிக்கும் வசனங்கள்
1.  பிரும்மநாயகம், வாசுவிடம் 'அரசியல்லே நல்லது கெட்டதுன்னு எதுவும் கிடையு   எதைப்பத்தியும் உனக்குச் சொந்த அபிப்பிராயம் இருக்கக் கூடாது.  நீ என்னோட நிழல். நிழல் ஊமை பேசாது. புரிஞ்சுதா?'

2. பிரும்மநாயகம் வாசுவிடம் ஆராய்ச்சிக் கட்டுரை எழுத பணிக்கும்போது,
'மக்கள் இத நம்புவாங்களா?
நம்பும்படியா எழுதவேண்டியது உன்வேலை.  அங்கேயிருக்கிற பாறைக்கு இத்தனை வயசு, பள்ளத்துக்கு அத்தனை வயசுனு ஒருத்தருக்கும் புரியாம நாலைஞ்சு இங்கிலீஷ் வார்த்தகளையெல்லாம் போட்டுக் குழப்பி, மேலெழுத்தும் அடியழித்துமா ஒரு ஆராய்ச்சி கட்டுரை உன்னாலே எழுதவா முடியாது? இது உன் கற்பனைக்கு ஒரு சவால் மாதிரின்னு வச்சுக்க.  பின்னாலே என் சுயசரிதை எழுத ஒரு பயிற்சி.  அவ்வளவுதானே?
உங்க சுயசரிதையும் என் கற்பனைக்கு ஒரு சவாலுங்களா?'

3.  ஆலிவர் வாசுவிடம்
'உங்க சத்தியத்துக்கு இதுதான் சோதனை..
இந்திரா பார்த்தசாரதி - படம் தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து
சத்தியத்திலே என் சத்தியம் உன் சத்தியம் வெவ்வேறே இருக்குதா?
இருக்கு. இதுதான் அரசியல்லே முதல் அரிச்சுவடி பாடம். '

இன்னும் நிறைய நறுக்குத் தெரிக்கும் வசனங்கள் இருக்கின்றன, படித்துப் பாருங்கள்.



எழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
மொத்த பக்கங்கள் : 136

Thursday, January 23, 2014

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(19-01-14 முதல் 25-01-14 வரை)

அலைபேசி தயாரிப்பு நிறுவனமான லாவா(lava) 2015 மார்ச் வாக்கில் தங்கள் நிறுவனத்தினை பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்ற வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஒரு நுண்ணறி contact lens -ஐ உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.  இது, மனிதனின் இரத்த குளுக்கோஸ் அளவை தானாகவே குறிப்பிட்ட இடைவெளிகளில் பதிவுசெய்துகொள்ளும் என்று கூறப்படுகிறது.  இது மட்டும் சாத்தியப்பட்டால் சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

2014-ம் ஆண்டில் உலகளவில் நுண்ணறி அலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.75 பில்லியன் அளவிற்கு அதிகரிக்கும் என்று eMarketer எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2013-ம் ஆண்டு செய்யப்பட்ட காப்புரிமைகளில் 6809 காப்புரிமைகளுடன் ஐபிஎம் நிறுவனம் தொடர்ந்து முன்னிநிலையில் உள்ளது.  இதைத் தொடர்ந்து சாம்சங், கேனான் போன்ற நிறுவனங்கள் உள்ளன.  கூகுள் நிறுவனம் 11வது இடத்தில் உள்ளது.

சீனா தனது சொந்தத் தயாரிப்பாக ஒரு புதிய அலைபேசி இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது. மேலும் இது ஆன்ட்ராய்டு, ஐபோன் போன்றவற்றைவிட அதிக பாதுக்காப்பானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகப் பிரபலமான அலைபேசி/உலாவி விளையாட்டான கேண்டி கிரஷ் விளையாட்டின் உருவாக்குனர்கள் கேண்டி என்கிற வார்த்தைக்கு காப்புரிமைப் பெற்றுவிட்டனர்.

அலைபேசி பேச்சு செயலியான வாட்ஸ்ஆப்(Whatsapp) தனது மாதாந்திர இயக்கத்திலுள்ள பயனர்களின் எண்ணிக்கை 450 மில்லியன் என்று அறிவித்துள்ளது.  மேலும், இதில் 35 மில்லியன் இந்திய பயனர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்ததக்கது.

புதிதாக நடத்தப்பட்ட நுகர்வோர் அனுபவத்தின் அடிப்படையிலான கணக்கெடுப்பின்(Consumer Experience Survey) அடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் மைக்ரோசாப்ட், சாம்சங், சோனி ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பெரிய நிறுவனங்கள், இணையதள பாதுகாப்பு(CyberSecurity) வல்லுனர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாமல் தடுமாறிவருவதாக சிஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

2013-ம் ஆண்டின் மிக மோசமான 25 கடவுச்சொற்களாக mashable.com  அறிவித்துள்ள (Password) (மோசமாக என்றால் மற்றவர்கள் கடவுச்சொல்லை அறிந்துகொள்ளும் வகையில் அமைந்த) அறியப்பட்டுள்ளவற்றில் முதல் 10 இடங்களைப்பெற்றுள்ள கடவுச்சொற்கள்
1. 123456
2. password
3. 12345678
4. qwerty
5. abc123
6. 123456789
7. 111111
8. 1234567
9. iloveyou
10. adobe123

2 முதல் 10 வயதுள்ள குழந்தைகள் பயன்படுத்தும் வண்ணம் எடி(Eddy) என்கிற பெயரில் ஆன்ட்ராய்டு 4.2 உடன் கூடிய ஒரு பலகைக் கணினியை மெடிஸ்(Metis) என்கிற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது பட்ஜெட் நுண்ணறி அலைபசியான மோட்டோ-ஜியை (Moto-G) வரும் பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.  விலை நிலவரம் சரியாக தெரியாவிட்டாலும் 11,000 ரூபாய் அளவில் இருக்கும் என நம்பப்படுகிறது.  இது ஆன்ட்ராய்டு கிட்கேட் பதிப்புடன் வருவுள்ளது.

2013-ம் ஆண்டு அலைபேசிகளை குறிவைத்து உருவாக்கப்பட்ட மால்வேர்களில் 99% ஆன்ட்ராய்டு அலைபேசிகளையே கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சிஸ்கோவின் அறிக்கை தெரிவிக்கிறது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு