Sunday, December 29, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(01-12-13 முதல் 07-12-13வரை)

ஸோலோ நிறுவனம் Q500 என்கிற பெயரில் ஒரு புதிய நுண்ணறி அலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்னாப்சாட் என்கிற குறுஞ்செய்தி பேச்சுச் செயலி மிகவும் பிரபலமடைந்து வருகிறது.  மற்ற பேச்சு செயலிகளைப் போலின்றி இதில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட கால அளவுக்குப் பிறகு (சில வினாடிகள்) பெறுநரின் பக்கத்திலிருந்து மறைந்து விடுவதோடு, வழங்கிக் கணினியிலிருந்தும் அழிந்துவிடம்.

இதுவரை கணினிகளைக் குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்த கொந்தர்கள், தற்போது நுண்ணறி தொலைக்காட்சி, பாதுகாப்பு கேமராக்கள் போன்றவற்றை தங்கள் கட்டளைக்கு ஏற்றவாறு செயல்படவைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

ஒரு நபர் tag செய்யப்படாத புகைப்படங்களிலும் அவரை அடையாளும் காணும் வகையில் ஒரு புதிய அல்காரிதத்தை (Algorithm)  டோரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்/பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட லிட்டில் ஐ லேப்ஸ் (Litte Eye Labs) நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக அறியப்படுகிறது.

அமேசான் தனது கின்டில் ஃபயர் பலகைக் கணினிகளின் விலையைக் குறைத்துள்ளது.  தன்னுடைய 16 GB பலகைக்கணினியை ரூ. 18,000 மற்றும் 32 GB பலகைக்கணினியை ரூ 26,000 -க்கும் விற்கவுள்ளது.  இது அவற்றின் பழைய விலையை விட ரூ. 4000 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் பலகைக்கணினிகளை உருவாக்கும் டேட்டா வைண்டு நிறுவனம் தனது யுபிஸ்லேட் சிலேட்டு கணினிகளுக்கு செயலிகளை உருவாக்குவதற்காக  ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

அமேசான் நிறுவனம் இந்தியத் தபால் துறையுடன் இணைந்து விநியோகத்தின்போது பணம் பெறுதல் (கேஷ் ஆன் டெலிவரி -Cash on Delivery) முறையில் தனது பொருட்களை விநியோகிக்க முயற்சித்து வருகிறுது.  இது நடைமுறை சாத்தியமானால் அமேசான் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தனது எல்லைகளை விரிவுபடுத்தி இந்தியாவில் தனது இருப்பை நிலைநிறுத்தி ஃபிளிப் கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இந்தியக் நிறுவனங்களுடன் விற்பனையில் மல்லுக்கட்டும்.

நௌக்ரி.காம்(Naukri.com) நிறுவனப் புகழ் இன்ஃபோ எட்ஜ்(InfoEdge) நிறுவனம் 10 கோடி ரூபாயை இணைய வழி கல்வி மற்றும் மதிப்பீட்டு நிறுவனமான ஆப்லெக்ட் லெர்னிங் சிஸ்டம்ஸ் (Applect Learning Systems) நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் அமேசான் நிறுவனத்துடன் போட்டியிடும் விதமாக தனது மேகக் கணிமைச் சேவைக்கான விலையை குறைத்துள்ளது.  இது அமேசானுக்கு நெருக்கடி தரக்கூடிய நிகழ்வாக தொழில்நுட்ப உலகில் பார்க்கப்படுகிறது.

ஏர்செல் நிறுவனம் அடுத்த 3-6 மாதங்களில் இந்தியாவில் தனது 4G சேவைகளைத் தரவுள்ளதாக அறிவித்துள்ளது.  பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்ததாக இந்தியாவில் 4G சேவைகளை இந்தியாவில் வழங்கவுள்ள 2-வது நிறுவனம் இதுவாகும்.

கூகுள் நிறுவனம் தனது குரோம் புக் (சாம்சங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது) இந்தியாவில் வெளியிடவுள்ளது, இதன்விலை இந்திய ரூபாய் சுமார் 27,000 ஆக இருக்கும் எனத் தெரிகிறது.

சாம்சங் நிறுவனம் தனது இருபுறமும் ஒளிபுகக்கூடிய திரைக்கு(transparent dual side screen) காப்புரிமைப் பெறவுள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

1 comment: